தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையின் காற்று பிஸ்கட்டைப் பிட்டு தேநீரில் நனைத்து சுவைப்பது போல இந்த ஞாயிற்றுகிழமையைப் பிட்டு ஒரு கோப்பை மதுவில் நனைத்து சுவைக்கிறேன். மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த அலுவலகத்தின் நா அறுக்கப்பட்டு விட்டது. மைதானங்களில் மகிழ்ச்சி ஒரு ரப்பர் பந்தென துள்ளிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன். இக் கொதி நிலம் திடீரெனக் குளிர்ந்து பெய்கிறது ஒரு ரம்யமான மழை. ஞாயிற்றுகிழமையின் காற்றுக்குதானா தென்றல் என்று பெயர் என்றொரு வரி தோன்றியது. இதையடுத்து உருகிவழிந்த கண்ணீரின் துளியொன்று கோப்பைக்குள் சிந்த எடுத்து அருந்தினேன். தாளாத தித்திப்பு அது! தாளாத தித்திப்பு அது!