Wednesday 22 December 2010

தற்கொலைக் கவிதையின் முலை




நாம் ஓடிப்போய் ஒரு தற்கொலைக் கவிதைக்குள் ஒளிந்து கொள்கிறோம்.
துரத்திவந்த தற்கொலை
எங்குபோனான் என்று தெரியாமல் குழம்புகிறது.
கவிதை தற்கொலையின் ஜென்மசத்ரு.
மனிதனுக்கு அரவமும் அரவத்திற்கு மனிதனுமாக
கடவுள் கவிதையையும் தற்கொலையையும் படைப்பித்தார்.
கால்களை தப்ப விட்டு விட்டு
நிலத்தை ஓங்கி ஓங்கி கொத்துகிறது தற்கொலை.
ஒரு தற்கொலை கவிதையின் முலை
கச்சணியாதது
உலகெங்கும் வாழும் பித்தன்கள் கடித்து கடித்து பாலுண்பது
தற்கொலை கவிதையின் முலை ஒரு பருவுடல் தாளாதது
மனுஷி எவளிலும் வளரவே வளராதது
மாமுலை போற்றுதும் !
மாமுலை போற்றுதும் !