Thursday 29 September 2011

வாணலிக்குள்ளிருந்து பேசுகிறேன்



எவன் குவளை நீரை தட்டிவிட்டேன்
எவன் குடிசைக்கு தீ வைத்தேன்
எந்த தெய்வத்தை நிந்தித்தேன்
எந்த பத்தினியின் விரதத்தை கலைத்தேன்
எந்த சொல்லால் எவன் நெஞ்சை சிதைத்தேன்
எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன்
எந்த குருடனுக்கு புதைகுழிக்கு வழிசொன்னேன்
எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன்
எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன்
எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன்
எவன் தொடைசதைக்கு நன்றி மறந்தேன்
எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு.

Friday 23 September 2011

மேயாத மான்

1) மான்கள்
மிரண்டது போல்
ஒரு பார்வை பார்க்கும்
அதற்கு நீ மிரண்டு விட்டால்
புரண்டு விட்டாய் போ!


2) மொட்டைக் கருவேலத்தின் சொப்பனத்தில்
எப்போதும்
ஒரு காயாத கானகம்.
அதில் ஏராளம் மான்கள்.


3) பொழுது விடிந்தது.
பொற்கோழி கூவிற்று.
அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள்.
ஜன்னல் கம்பிகளூடே
ஓடி மறைகின்றன
சில மாயமான்கள்.

4 ) சாயாத கொம்பிரண்டும்
முட்டிமுட்டி கொன்றிட்டால்
களிமோட்சம் உனக்குத்தான் சா !

5 ) சொல் “ மகாலிங்கம் “ !
எத்தனை மான்தான்
வேண்டும் உனக்கு.