Skip to main content

Posts

Showing posts from January, 2017

பரட்டைத்தலை அன்பு

                                              தெருமுக்கில் குந்தி  பீடி வலிக்கும் பரட்டைத்தலை என் அன்பு நீ பார்க்கும் போது அது பீடியைக் கீழே எறிவதில்லை நீ காணும் போது எறிய வேண்டும்  என்பதற்காகவே அதைப் பற்ற வைப்பதுமில்லை ஒரு நிமிடம் முன்புதான் அது ஒரு குருட்டுப்பிச்சைக்காரனுக்கு சாலையைக் கடக்க உதவியது அதற்குத் தெரியும் ஒரு நிமிடத்தில் நீ வந்து விடுவாயென. அதற்குத் தெரியாததோ ஒரு நிமிடம் அவனைத் தாமதிக்க வைக்கும் லாவகம் அது பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறும் முன்பே கண்டு கண்டு சலூன் கண்ணாடிகளை உடைக்கும் முன்பே கிளிப்பசையிலிருந்து  மென்கட்டச் சட்டைகளுக்கு மாறும் முன்பே அதை கால்சட்டைக்குள் செருகி விட்டுக் கொள்ளும் முன்பே கிச்சுக்குள் நறுமண தைலங்களை பூசிக்கொள்ளும் முன்பே பிறவியிலிருந்தே சாய்ந்திருக்கும் நடையை வெட்டிச் சீராக்கும் முன்பே அவசர அவசரமாக  அதற்கு அன்பு வந்து விட்டது நேர்த்தியற்ற அன்பு உன்னை முத்தமிடுகிறது அது இந்த உலகத்தில் இது வரை யாராலும் இடப்படாத ஒரு முத்தம் ஆனாலும் என்ன, கடைவாயில் கொஞ்சமாக  சல்லொழுகி விட்டது சல்லொழுக்கும் நேர்ந்தே  அதன்

பெருமூச்சின் புயவலி

                                    பொறாமை  கத்தியைத் தூக்கிக் கொண்டு என்னோடு சண்டையிட  வந்தது. நான் அதனோடு  நடனமிட்டேன் அது வனமிருகத்தின்  வாயால் அர்த்தமற்ற  சொற்களை  பீய்ச்சியடித்தது நான் அதனுடன் நிதானமாக உரையாடினேன் அது  தன்  தலையால் என் நெஞ்சை உடைக்க வந்தது நான் சற்றே விலகிக் கொண்டேன் என்  இதழ்க்கடை மலர்  கண்டு அதன்  சித்தம் கலங்கி விட்டது கடைசியில்  ஒரு மல்லன்  தன் புயவலியைக்  காட்டுவதைப் போலே, பொறாமை  சட்டையைக் கழற்றி  எறிந்து விட்டு  அதன்  ஏக்கங்களைக்  காட்டிக் கொண்டு  நின்றது. அது கண்டு நான் காலொடு மண்டு விட்டேன்.

அநாதைகளின் அமரகாவியங்கள்

                                                            பாடகன் ஆகிவிட வேண்டுமென்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே நான் அதைத்தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். பின்னாட்களில் எனக்கு எந்தக்குரலும் பொருந்தவில்லை என்பதைக் கண்டுகொண்டேன் என்றாலும், எஸ்.பி.பி குரல் எனக்குப் பொருந்தவில்லை என்பதை முன்பே அறிந்து கொண்டேன். எனவே எனக்கு முன்பு இளையராஜா என்றும், பின்பு சங்கர்மகாதேவன் என்றும் நினைப்பு. நான் பாடினால் எனக்கு மட்டும் இளையராஜா போன்றே கேட்டது. காதுக்குள் விதவிதமான கருவிகளை செருகிஎடுத்த போதும் இந்த நோயை குணமாக்க கூடவில்லை. எனினும் இந்நோய் உடலுக்கு பெரிதாக ஊறு செய்யவில்லை. மேலும் மனதிற்கு நேரும் இன்னல்களை விரட்டவும் இதுவே உதவியது. கொஞ்சம் முயன்றிருந்தால், கொஞ்சம் துணிந்திருந்தால் நானும் ஒரு நகலிசைக் கலைஞன்தான் என்பதை இன்றும் விடாது நம்புவதால் , இந்நூல் எனக்கு என்னை ஒத்த ஜீவன்களின் கதைகளைப் பேசுகிறது.   நானும் ஒன்றும் சாதாரண கலைஞனல்ல. எட்டாவது படிக்கும் போதே “ டவுசர் விறைக்க, கைகளைக் கட்டிக்கொண்டு “ இசைத்தமிழ் நீ செய்த அரு

“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “

                                                                                                                                 இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்.. “ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில  மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “  “சின்ன “ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான். கல்யாண்ஜியை பார்த்துவிட்டு வந்து பிறகு அவனிடன் சொன்னேன். “ நண்பா அந்தாளுகிட்ட கொஞ்சம் ஜாக்கிரையாத்தான் இருக்கனும் போல.. அவர் என்னை ” சத்யன் ” ன்னு கூப்டறார்டா.. “ ஏதோ ஒரு மந்திரவாதியைப் பற்றிய கதைகளைப் போல அவரைப் பற்றிப் பேசிக்கொண்டோம்.   என் அம்மா, அப்பா இருவரைத் தவிர  வேறு யாரும் என்னை சத்யன் என்று  அழைத்ததில்லை. இப்படியாக முதல் சந்திப்பிலேயே அவர் என்னை ’’ திட்டமிட்டு ” உருக்கிவிட்டார்.        என்னை நானே உற்சாகமாக்கிக் கொள்வதற்காக வெளியிட்ட என் முதல் தொகுப்பை யாரும் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளங்கோ, சுகுமாரன் இருவர் வீட்டில் மட்டும் அது இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை கல்யாண்ஜி வீட்டிலும் அது இருக்கலாம். அ

போலீஸ் வதனம்

                            நான்குமுனைச் சந்திப்பொன்றில் ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும் கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர். குடியானவன் வெலவெலத்துப் போனான் கண்டோர் திகைத்து நின்றனர் அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய் எல்லோரும் காத்திருக்க அதிகாரி குடியானவனை நேர்நோக்கி ஒரு சிரி சிரித்தார். அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் ஓசை கேட்டது. “ நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “  என  வாழ்த்தியது வானொலி.  போலீஸ் தன் சுடரை   ஒரு கந்துவட்டிக்காரனிடன் பற்ற வைத்து விட்டுப்போனார்.   அவன் ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன். கிழவி தலையைச் சொரிந்த படியே “ நாளைக்கு... “ என்றாள்.  ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன். அதில் பிரகாசித்துப் போன கிழவி இரண்டு குட்டி ஆரஞ்சுகளை சேர்த்துப் போட்டாள். அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது. எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள். சிறுமியின் காலடியில் நாய்க்குட்டி