ஈயும் எறும்பும் மொய்க்க நாற்றமெழுப்பிக் கிடக்கிறேன். அதிகாலையில் என்னைக் கண்ட முதல்மனிதன் ஆண்டாண்டு காலமாய் நான் தூக்கிச் சுமந்த பெயரை அழித்துப் போட்டான். சின்னஞ்சிறு கொலைகளிலிருந்து என்னை விடுவித்துவிட்டமைக்காக அவனுக்கு என் நன்றி. நொடிக்கு நொடி என்னை அறுத்துக் கொண்டிருந்த அச்சத்தின் மீது ஏறிப் போயிருக்கிறது ரயில். எனில், இனி நான் ஏறப் போவது இரண்டாவது சொர்க்கரதம். உச்சிவானில் முதல் கழுகு உதித்து விட்டது. நாய்களின் மூளையில் திருவிழாக் கனவு தவறி என் நெஞ்சத்தை கொத்தி ஏக்கத்தை உண்டுவிட்ட காகமொன்று கொஞ்ச தூரத்தில் எரிந்து விழுகிறது.