நண்பனும் கவிஞனுமான வே.பாபு 11/11/2018 அன்று மாலை சுமார் 6 மணியளவில் உடல் நிலை கோளாறு காரணமாகக் காலமானான். 1974 ல் பிறந்த பாபு தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வந்தவன். எனினும் 100- கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளான். தக்கை என்கிற சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவன். பாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளை பலகீனமானவை என்று சொல்லி விடலாம். ஆனால் எல்லா தருணங்களிலும் பலத்தால் மட்டுமே பிரகாசித்து விட முடியாது. பலகீனம் பளீரிடும் தருணங்களும் உண்டு. அங்கு துலங்குபவை அவன் சொற்கள். அவை தன் எளிய உடலால் வலிய மனங்களையும் அசைத்துப் பார்த்தன . தாமிரபரணி படுகொலை, ஈழப்பிரச்சனை, வர்க்க முரண்கள் என்று சில கவிதைகள் எழுதியபோதும் பாபு ஒரு எளிய லெளகீக கவிதான். லெளகீகம் அவ்வளவு எளிதில்லை என்பது கூடவே சொல்லியாக வேண்டிய ஒன்று. அவ