Skip to main content

Posts

Showing posts from October, 2018

நூற்றாண்டிற்குப் பிறகு

        வேகமெடுத்து   ஓடிப்போய் எம்பி அந்தரத்தில் உயர்ந்து உச்சிச்   செவ்வரளியைப்   பறித்தே   விட்டேன் . எட்டு   நொடிகள் என்னைப்    பறக்கவிட்டது எதுவோ அதற்கு கண்ணீர்   வழிய   நன்றி .

பாடகனற்ற பாடகன்

                        பாடகனற்ற   பாடகனுக்கு       " பாடகன் " என்கிற இரும்புக் குண்டால்        மூச்சிரைப்பதில்லை.        சபையில்லை  ;  செவிகளுமில்லை.        பாடுதலே  கரகோஷம் என்பதால்        எதற்கும் ஏங்கி அழிய வேண்டியதில்லை.        தன்னைத் தானே அணைத்துக் கொள்ளும் ஜாலத்தில் தேர்ந்த பிறகு        அச்சமில்லை ; அழுகையுமில்லை.         பாடகனற்ற பாடகனின் பாத்ரூமில்        ஒரு நெளிந்து வளைந்த சில்வர் பக்கெட் ...        ஆயினும், அதனுள்ளே செழுமலைச் சுனைநீர்.      அவன்  ஹெல்மெட்டுக்குள் தால் அன்றி வேறு ஒன்றுமேயில்லை.

மகத்தான ஈ

நீள்விசும்பினில்   உயரப் பறந்தும் மா நிலத்திடை  ஆழ  உழுதும் சஞ்சய் பாடுகிறார் சஞ்சய் பாடுகையில் மைக்கும்  ஒரு இனிப்புப் பண்டம்தான் அதன் வடவடப்பில் மொய்த்துக் கொண்டிருக்கிறது ஒரு ஈ அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும் அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது. மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும் விரட்டுவதற்குப்  பதிலே அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது. அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென மின்சார ஒயர்களின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிறது. மகத்தான விஷயங்களின் மீது ஈயாயிரு மடநெஞ்சே!                 (நன்றி : தடம் - அக்டோபர்-18)