நாய் புழுதியில் புரள்வது போல இந்த நாள் சோம்பலில் புரள்கிறது. அவன் அவனை இழுத்துக் கொண்டு அலுவலகம் போனான். அதே மெஸ் பையன் அதே இட்லியை வைத்தான் இதே இட்லியின் முகத்தில் எத்தனை காலமாய் விழித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பு குமட்டிக் கொண்டு வந்தது. வேண்டுமானால் வேலையை விட்டு நீக்கிக் கொள்ளுங்கள் எனும்படிக்கு அதிகாரிகளுக்கு அரை வணக்கம் வைத்தான். இன்று புதிதாக நான்கு கோப்புகள் தேங்கிவிட்டன. வாங்குவதற்கு ஒன்றுமில்லையாயினும் அவன் வாகனம் அவனை ஒரு ஷாப்பிங் மாலிற்கு அழைத்து சென்றது " நேராக நெஞ்சிற்குள் செல்லும் படியாக ஒரு பெர்ப்யூம் இல்லையா?" என்று கேட்டான். சிப்பந்தி ஒரு கணம் திகைத்துப் போனான். மறுகணம் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இருவரும் கொஞ்சம் அழுதது போலவும் இருந்தது.