Skip to main content

நான்கு கவிதைகள்

மர்ம மலர்
தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.
விடாது தொடுத்த 11 வது அழைப்பால்
தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.
அவன் ” ம்” கொட்டுகிறான்.
உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறை
தலைவி தன் தலை கொண்டு மோதி
அதையும் உடைக்கிறாள்.
கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று ஒரு தனி மதுரமுண்டு.
தலைவன் அதை முன்பறியா பாலகன்.
அம்மதுரம்
ஊடலின் கழுத்தைத் திருகி
குப்பை மேட்டில் எறிகிறது.
விட்ட கதைகளை பேசித் தீர்த்தபின்
அவன் தன் உள்ளாடையில்
ஒரு சின்ன ஈரத்தை உணர்ந்தான்.
அது கண்டு திகைத்தான்.
குழம்பினான்.
வருந்தினான்.
பிறகு
வெற்றுத் தரையில்
நிலவின் கீழ் மல்லாந்த படி
தன் முதல் பாடலைக் கட்டினான்.
“உலகின் அழகான விந்துக்கறையே!”

ஒழிக நின் கொற்றம் !

என் பொறாமை
எனக்கு வணக்கம் தெரிவித்தது.
நான் தூரத்து மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோள்தொட்டுத் திருப்பி
திரும்பவும் சொன்னது.
முகந்திரிந்து யார் என்பது போல் நோக்கினேன்.
பேர் சொன்னது
ஊர் சொன்னது
ஒன்றாகப் படித்த பள்ளியைச் சொன்னது.
இருவருக்கும் பொதுவான நண்பர்களைச் சொன்னது.
எந்தெந்த மரத்திலேறி
எந்தெந்த ஆற்றில் குதித்தோம்
என்று சொன்னது.
அடிவயிற்றில் உதைபட்டு
கும்மிருட்டில் கிடந்து விசும்பிய நாளை
நினைவு படுத்தியது.
பழங்கதைகள் இப்படி பலபல பேசியது.
கடைசியில்
ஒரு ஒடுங்கிய அலுமினியப் பாத்திரத்தை
தலையிலேற்றி
குரங்கைப் போல் குட்டிக்கரணம் அடித்துக் காட்டியது.
“தெரியவே தெரியாது” என்று
உறுதியாக மறுத்துவிட்டேன்.

பேசிக் மாடலுக்குத் திரும்புதல்
தன் ஆண்ட்ராய்டை தரையில் அடித்து
உடைத்து விட்டு
பேசிக் மாடலுக்குத் திரும்புகிறான் ஒருவன்.
பேசிக் மாடலுக்குத் திரும்புவதென்பது
மாட்டு வண்டிக்குத் திரும்புவது
நிலா சோற்றுக்குத் திரும்புவது
அணிலாடும் முன்றிலுக்குத் திரும்புவது
P.b. ஸ்ரீனிவாஸிற்குத் திரும்புவது
மீதியை வெண்திரையில் காண்க என்கிற
பாட்டுப் புத்தகத்திற்குத் திரும்புவது
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு
சூர்யா டி.விக்குத் திரும்புவது
“I love you” என்கிற ஆகப் பெரும் குழப்பத்திலிருந்து
“நான் உன்னைப் புணர விரும்புகிறேன்” என்கிற
தெள்ளத் தெளிவிற்குத் திரும்புவது.



அவ்வளவு
நீ ஏன்
அவ்வளவு தூரத்திலிருக்கிறாய்?
சென்று
காணுமளவுக்கு.

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...