Skip to main content

Posts

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!
Recent posts

செம்மறு என்கிற இரத்தக்கறை- கபிலர் கவித்துவத் திரட்டு

“போர் படு மள்ளர்” என்கிற சொற்றொடர்க்கு போர் வீரர்கள், போர் செய்யும் மள்ளர்கள் என்று பொருள் சொல்லலாம். ஆனால் நம் உரையாசிரியர்கள் “போரில் அல்லாமல் பிறவகையில் இறத்தலை விரும்பாத” என்றே உரை சொல்கிறார்கள். “படு” என்கிற சொல் அந்த உரைக்கு பொருத்தமாகவும்தான் இருக்கிறது. என்னதான் வீரமறக்குலத் தோன்றல் என்றாலுமே, ஒரு உயிர் அப்படி விரும்புமா என்பது குறித்து எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. “அவ்வளவு சந்தேகத்தோட நீ என்ன மயித்துக்குடா என் பாட்டனின் இலக்கியத்த பாடுற..?” என்று “இடும்பாவனம் கார்த்தி” கர்ஜிக்கும் ஓசைவேறு என் காதில் கேட்கிறது. முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே உள்ளது https://akazhonline.com/?p=11501

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?

மூன்று கவிதைகள்

உனது லட்சணம் இந்த முறை “போகிறேன்..” என்பதை அவ்வளவு திடமான குரலில் சொன்னாள் போய்விடுவாள்தான் போல? எழுந்தவள் எட்டு வைத்து நடக்கிறாள் பின்னோக்கி… பின்னோக்கி… உச்சிவெயிலில் மொட்டைப் பாறையில் நன்றாகச் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு ஆயுளுக்கும் அசையாத கதியில் அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? காலிப்பொன் கனத்த செல்வமென கொஞ்ச காலம் உன்னை என் கைகளில் ஏந்தியிருந்தேன். இந்தக் கைகளில்.. இதே கைகளில்.. காலியாகிக் கிடக்கிற இதே கைகளில் இப்பவும் இவைதான் வெறுங்கைகள் ஆகுமோ ? கனத்த செல்வம் சுடர்ந்த கைகள் இளம் இசை மாணவனின் புத்துலகு நான்குமுனைச் சந்திப்பின் மூலையில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி ‘ரி’ யிலேயே நின்று கொண்டிருப்பார் அறிஞர் அண்ணா விளையாட்டுச் சிறுவர்கள் தூண்களுக்குப் பின்னே மறைந்து கொண்டு சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் ‘பதநி ‘ டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன. அந்தப் படகு ‘ஸரிகம’ வில் ஏறி ‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது ஒருவன் இன்னொருவனின் முகத்துக்கு நேரே ‘க’ வை நீட்டி வசை மொழிகிறான் ‘ க’ வை அவ்வளவு நெருக்கத்தில் கண்டவனின் கண்கள் இரத்தமாகின்றன. சப்தம் முடக்கப்பட்ட கலவிப் படத்தில் கவ்வி இழுத்து மெல்...

பல்லைப் பிடுங்குவது குறித்து

அ வருக்கு 7 பற்களை கட்டாயம் அகற்றியாக வேண்டும் இரண்டு தவணைகளில்  என்பது ஒரு சின்ன சலுகை. அவருக்குத் தேக பலமில்லை செல்வ வளமில்லை. அம்மா இறந்து போய்  ஆண்டுகள் இருபது ஆகிவிட்டன வந்த அம்மாக்களோ  சென்று விட்டனர் ‘வெடுக்’ , ‘வெடுக்’  என்கிற வலியைத் தவிர இப்போது அவருடன்  வேறு ஒருவருமில்லை பற்றும் கரங்கள் அற்றவருக்கு தவறும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை கடைவாய்ப் பஞ்சைத் தாண்டி  குருதி  வெளியே கொட்டினால் அதைத் துடைக்க கொள்ள அவரது இரண்டு கைகளும் நலமுடன்தான் திகழ்கின்றன. எளிதில்  அசைந்து தராத பல்லை குறடால் அழுத்தி வலு திரட்டி  இழுக்கையில் நினைத்துக் கொள்வதற்கென்றே அவருக்குச் சில நினைவுகள் உண்டு ஆகவே அவர் எதற்கும்  பயப்பட வேண்டியதில்லை

பேய் பங்களா

வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை  வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில்  ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.