Skip to main content

இசை கவிதைகள்

 




1


மேலோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு


ஒரு உடையிலிருந்து

இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல

ட்ரவுசருக்கு மாறுவது


ட்ரவுசருக்கு மாறுகையில்

நான் தயாராகிறேன்

எதற்கென்றால்

எல்லாவற்றிற்கும்


உறக்கத்திற்கு

போர்க்களத்திற்கு

எல்லாவற்றிற்கும்


ட்ரவுசர் அணிந்தவுடன்

சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள்

மேலோட்டமான நம்பிக்கைகளில்

வாழ்ந்து வருபவர்கள்

அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை


சுற்றுலா செல்கையில்

ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு

ட்ரவுசர் ஒரு சுற்றுலா

என்பாரும் உண்டு


ட்ரவுசரில் இருக்கையில்

நான் என் காதலி


அதை அளக்க முடியாது

என்பது போலவே

சுருக்கவும் முடியாது


ட்ரவுசரை காற்றோட்டம் என்பது

மூடர் தம் சுருக்கம்



2


அங்கு



கொட்டு கொட்டென்று

கொட்டித் தீர்த்த இசை

சட்டென

நின்று விட்டது



நிசப்தமும் 

முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்!




3


மிழ் மலர்கள்


அது ஒரு சின்னத் தோட்டம்


அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள்.


இன்று

புதிதாக

அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள்


“அருமலர் எழிலகம்”


அதில்

இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன.


அதற்குள்

பூத்துக் குலுங்கிவிட்டன.



4


தேங்கெண்ணெய்


“அம்மா…” என்று கூவியபடி

முதல் முட்டிக் காயத்துடன்

தெருவிலிருந்து

வீட்டுக்குள் ஓடி வந்த போது

மாரோடணைத்துக் கொண்டு

கொஞ்சம் தேங்கெண்ணெய்

பூசி விட்டாள்.


உதடு வெடிப்புக்கும், வயித்துச் சூட்டுக்கும்

அதே தேங்கெண்ணெய்யேதான்


படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு

ஞாபக மறதிக்கு

முகப்பருவுக்கும்

அதேதான்


எது குறைந்தாலும்

தேங்கெண்ணெயால்

அவள் அதைக் கூட்டி விடுவாள்


மகன்

வீதியில் வாந்தி மீது விழுந்து கிடந்தமைக்கு

மண்டைச்சூடுதான் காரணம் என்பாள்


உள்ளங்கையில் தேங்கி நிற்கும்

நான்கு சொட்டால்

உலகத்துக் கோணல்களையெல்லாம்

வழித்தெடுத்து விடுவாள்


“ஒரு வாரத்துல சுக்கா காஞ்சிடும்….”என்று

ஒரு கட்டி மீது ஊற்றுகிறாள்

அவளது அருமருந்தை


கட்டி சொன்னது…


“நான் கேன்சர்கட்டி வந்திருக்கிறேன், உன் தேங்கெண்ணெயைக் கொல்வதற்காக…”


5


சிறிதே!


அவ்வளவு பெரிய வானம் என்பது

அதைக் காணும்

சின்னஞ்சிறிய

நீ தான்.




ஓவியம் : சேது வேலுமணி

Comments

Thendral said…
கவிஞனும் இறைவனும் ஒன்றே ....கதையில் எதிர்பார்க்காத திருப்பங்கள்!!!

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

நார் இல் மாலை - சங்கத்து மாலைக்காட்சிகள்

அ.முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலொன்றில் இதுபோலச் சொன்னார். “சங்க இலக்கியங்கள படிச்சாவே போதும்...எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சில சமயம் தோன்றும்..”. எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படித் தோன்றியதுண்டு. அகப்பாடல்களின் முதற்பொருள் நிலமும் பொழுதும். அவை நிலத்தையும் பொழுதையும் விரித்துப் பேசியவை. தொல்காப்பியம் வகுத்துச் சொல்லும் ஐவகை நிலங்களை நாம் அறிவோம். பொழுதுகளில் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரண்டுண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்கள் பெரும் பொழுதாகவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் போன்ற பொழுதுகள் சிறுபொழுதுகளாகவும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் மாலையைப் பற்றியே நம் அகப்பாடல்கள் அதிகமும் பாடியுள்ளன. சங்கத்து மாலைக்காட்சிகளில் நான் கண்டு மயங்கிய சிலவற்றை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். சங்கப்பாடல்கள் எல்லா பொழுதையும் பாடியுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா பொழுதுகளும் அதில் உண்டு. “தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (கு...