Skip to main content

இசை கவிதைகள்

 




1


மேலோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு


ஒரு உடையிலிருந்து

இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல

ட்ரவுசருக்கு மாறுவது


ட்ரவுசருக்கு மாறுகையில்

நான் தயாராகிறேன்

எதற்கென்றால்

எல்லாவற்றிற்கும்


உறக்கத்திற்கு

போர்க்களத்திற்கு

எல்லாவற்றிற்கும்


ட்ரவுசர் அணிந்தவுடன்

சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள்

மேலோட்டமான நம்பிக்கைகளில்

வாழ்ந்து வருபவர்கள்

அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை


சுற்றுலா செல்கையில்

ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு

ட்ரவுசர் ஒரு சுற்றுலா

என்பாரும் உண்டு


ட்ரவுசரில் இருக்கையில்

நான் என் காதலி


அதை அளக்க முடியாது

என்பது போலவே

சுருக்கவும் முடியாது


ட்ரவுசரை காற்றோட்டம் என்பது

மூடர் தம் சுருக்கம்



2


அங்கு



கொட்டு கொட்டென்று

கொட்டித் தீர்த்த இசை

சட்டென

நின்று விட்டது



நிசப்தமும் 

முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்!




3


மிழ் மலர்கள்


அது ஒரு சின்னத் தோட்டம்


அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள்.


இன்று

புதிதாக

அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள்


“அருமலர் எழிலகம்”


அதில்

இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன.


அதற்குள்

பூத்துக் குலுங்கிவிட்டன.



4


தேங்கெண்ணெய்


“அம்மா…” என்று கூவியபடி

முதல் முட்டிக் காயத்துடன்

தெருவிலிருந்து

வீட்டுக்குள் ஓடி வந்த போது

மாரோடணைத்துக் கொண்டு

கொஞ்சம் தேங்கெண்ணெய்

பூசி விட்டாள்.


உதடு வெடிப்புக்கும், வயித்துச் சூட்டுக்கும்

அதே தேங்கெண்ணெய்யேதான்


படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு

ஞாபக மறதிக்கு

முகப்பருவுக்கும்

அதேதான்


எது குறைந்தாலும்

தேங்கெண்ணெயால்

அவள் அதைக் கூட்டி விடுவாள்


மகன்

வீதியில் வாந்தி மீது விழுந்து கிடந்தமைக்கு

மண்டைச்சூடுதான் காரணம் என்பாள்


உள்ளங்கையில் தேங்கி நிற்கும்

நான்கு சொட்டால்

உலகத்துக் கோணல்களையெல்லாம்

வழித்தெடுத்து விடுவாள்


“ஒரு வாரத்துல சுக்கா காஞ்சிடும்….”என்று

ஒரு கட்டி மீது ஊற்றுகிறாள்

அவளது அருமருந்தை


கட்டி சொன்னது…


“நான் கேன்சர்கட்டி வந்திருக்கிறேன், உன் தேங்கெண்ணெயைக் கொல்வதற்காக…”


5


சிறிதே!


அவ்வளவு பெரிய வானம் என்பது

அதைக் காணும்

சின்னஞ்சிறிய

நீ தான்.




ஓவியம் : சேது வேலுமணி

Comments

Thendral said…
கவிஞனும் இறைவனும் ஒன்றே ....கதையில் எதிர்பார்க்காத திருப்பங்கள்!!!

Popular posts from this blog

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்

                                                                                                       நண்பர் செந்தில்   தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக   பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே   “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...