Skip to main content

நந்தவனத்தாண்டி பாடல்கள்


1.அவனைக் கொண்டு போய் நீ
அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய்.
பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய்.
அவன் இது வரை பார்தேயிராத அருவி அது.
தண்நீர் அவன் தலையில் விழுந்து
தேகமெங்கும் வழிந்தது.
மெல்லிய விசும்பல்களை, ஒரு கனத்த அழுகையை
அது கரைத்துக் கொண்டோடியது.
அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான்.
நீ தான் விடவில்லை.
இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான்.


2. நீ அவனுக்கென மதுரமான உணவுகளைச் சமைத்தாய்.
அழகான விரிப்புகள் போர்த்தப்பட்ட மேசையில் இருத்தினாய்.
பளிங்கு போன்ற குடுவையில் நீர் வைத்தாய்.
அவன் பசியறியாதவள் நீ.
அவன் முகம் முழுக்க சாப்பிட்டான்.
நெஞ்செங்கும் நீர் குடித்தான்.
காணச் சகியாத நீ
கண்களைத் திருப்பிக் கொண்டாய்.



3. நாம் கதைகளில் மட்டும் படித்திருக்கிற
பொன் நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது.
கண் கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு.
100 முறை ஸ்பரிசித்து விட்டால்
ஓடி விடும் பறவை அது.
அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான்.
பிறகு விவரம் அறிந்து பதறியவன்
இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக
நூறாவது முறை தொட்டான்.


4. அவனுக்கு தெரியவில்லை
10 மீட்டர் இடைவெளியில்
எப்படி பயணிப்பதென்று.



5. சர்க்கரை அதிகமான காப்பியை
உனக்கு பிடிப்பதில்லை.
எல்லாம் சரி விகிதத்தில் கலந்த
ஒரு காப்பியை
அவனால் உனக்கு தர இயலவில்லை.



6. கீழே
சிறிய எழுத்துக்களில்
நட்சத்திரக் குறியிட்டு
“கண்டிசன்ஷ் அப்ளை” என்று
ஒரு வரி எழுதியிருந்தாய்.
அவன் அதை கவனித்திருக்க வில்லை.


7.அன்பின் வாலொன்று அவ்ன் பின் புறத்தில்
துருத்த துவங்கியது.
அது நீண்டு வளர்ந்து உன் கால்களை இறுக்கிய போது
தீயில் இட்டுச் சிவப்பாக்கிய
ஒரு இரும்புச் சொல்லால்
அதை ஒண்டக் கருக்கினாய்


நன்றி; சிக்கிமுக்கி.காம்

Comments

நிதர்சனம்.
Anonymous said…
மயிர்!
உணர்ந்தவனால் உணரமுடியும் உணர்வுகள் ........அருமையான வார்த்தையாடல்

Popular posts from this blog

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...