Skip to main content

வானம் - நீலம்

வானம் சிக்னலில் சிக்கிக் கொண்டது.
ஒரு பிச்சைக்கார சிறுமி
அதை நெருங்கி வந்து பிச்சை கேட்கிறாள்.
வானம் சிவப்பு விளக்கை வெறித்துக் கொண்டு நிற்கிறது.
அவள் தொட்டு தொட்டு நச்சரிக்க
எரிச்சலில்
ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்திருந்த பர்ஸை எடுத்து
அதில் சில்லரைகளைத் தேடியது.
அவை எங்கோ இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்தன.
எனவே வானம்
பர்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது
அப்போது உள்ளிருந்து தெறித்து விழுந்தது ஒரு யோனி.
கடவுள் கிருபையால் சிக்னல் எடுக்க
இன்னும் பத்து வினாடிகள் இருந்தன.
பதறித் துடித்த அது ஐந்து வினாடிகளுக்குள்
தவறவிட்டதை கைப்பற்றி விட்டது.
அருகிருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டில் வாங்கி
அதை நன்றாக அலசி
தன் கர்ச்சீப்பால் துடைத்து உலர்த்தி
மீண்டும் பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டு கிளம்பியது.

நீலம் வழக்கமாக போகும் பேருந்தில்
இன்று கூட்டம் அதிகம்.
நிற்க கூட இடம் இல்லை.
எனவே அது ஒற்றைக் காலில் பயணித்தது.
உணவு இடைவேளையில்
பையை திறந்து பார்த்தால்
சாம்பார் டப்பாவும், தயிர் கிண்ணமும்
கழன்று பை முழுக்க சிந்தியிருந்தது.
அதன் ஈரமும் நாற்றமும் அதற்கு எரிச்சலூட்டியது.
அது அவசர அவசரமாக பையில் இருந்த பொருட்களை
எடுத்துப் பார்த்தது.
எல்லாவற்றிலும் ஈரம் படர்ந்திருந்த்து.
நல்ல வேளையாக
ஒரு தனிஅறையில்
பிளாஸ்டிக் கவருள் வைத்து
பத்திரமாக பின்னடிக்கப்பட்டிருந்த கறுத்த குறிக்கு
எதுவும் நேர்ந்திருக்கவில்லை.
அதை மட்டும் எடுத்து
தன் பிரத்யேக லாக்கரில் வைத்து பூட்டி விட்டு
நனைந்த பொருட்களையெல்லாம் ஃபேனுக்கடியில் வைத்து விட்டு
கேண்டீனுக்கு போகிறது நீலம்

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.