Skip to main content

கழியூன்றித் தாண்டுதல்


மேல்சட்டையை கால்சட்டைக்குள் செருகி
பெல்ட் வைத்துக் கட்டி
ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன்.
முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில்
நெகுநெகு வென்று திறந்தது ஒரு நாள்
சப்பென்றிருக்கும் நாளின் மீது
கொஞ்சம் உப்பையும், மிளகாய்பொடியையும்
தூவி விடுவேன்.
இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு
ஆனால் இன்றோடு பழசாகிவிட்ட இவற்றை
இன்னொரு நாளின் மீது கொட்ட முடியாது.
தியேட்டரில் போஸ்டர் மாற்றுவது
உற்சாக மூட்டுகிறதெனினும்,
இனி ஒரு மாததிற்கு அதே வெள்ளை சுமோ
அதே கண்ணிவெடிக்கு சிக்கி அதே உயரத்தில் தூக்கி வீசப்பட்டு
அதுபோலவே வெடித்து சிதறுமே.. கடவுளே..
பூட்ஸ் போட்டுக் கொள்கிறேன்
வழக்கத்திற்கு மாறாக ரயிலில் போகிறேன்
வழக்கத்திற்கு மாறாக பேருந்தில் போகிறேன்
அதிகாலையில் எழுந்து நடந்து போகிறேன்
ஒரு நாளில் மூன்று முறை குளிக்கிறேன்
வேம்பில் பல்துலக்கி
பன்னீரில் கொப்பளிக்கிறேன்.
எம்கேடி எத்தனை நாட்களைத் தான்
வெளுத்துத் தருவார்..
வாயில் ஊறும் இது,
இந்த நாளில் இருப்பத்தி மூன்றாவது கம்பர்கட்.

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.