Skip to main content

கழியூன்றித் தாண்டுதல்


மேல்சட்டையை கால்சட்டைக்குள் செருகி
பெல்ட் வைத்துக் கட்டி
ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன்.
முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில்
நெகுநெகு வென்று திறந்தது ஒரு நாள்
சப்பென்றிருக்கும் நாளின் மீது
கொஞ்சம் உப்பையும், மிளகாய்பொடியையும்
தூவி விடுவேன்.
இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு
ஆனால் இன்றோடு பழசாகிவிட்ட இவற்றை
இன்னொரு நாளின் மீது கொட்ட முடியாது.
தியேட்டரில் போஸ்டர் மாற்றுவது
உற்சாக மூட்டுகிறதெனினும்,
இனி ஒரு மாததிற்கு அதே வெள்ளை சுமோ
அதே கண்ணிவெடிக்கு சிக்கி அதே உயரத்தில் தூக்கி வீசப்பட்டு
அதுபோலவே வெடித்து சிதறுமே.. கடவுளே..
பூட்ஸ் போட்டுக் கொள்கிறேன்
வழக்கத்திற்கு மாறாக ரயிலில் போகிறேன்
வழக்கத்திற்கு மாறாக பேருந்தில் போகிறேன்
அதிகாலையில் எழுந்து நடந்து போகிறேன்
ஒரு நாளில் மூன்று முறை குளிக்கிறேன்
வேம்பில் பல்துலக்கி
பன்னீரில் கொப்பளிக்கிறேன்.
எம்கேடி எத்தனை நாட்களைத் தான்
வெளுத்துத் தருவார்..
வாயில் ஊறும் இது,
இந்த நாளில் இருப்பத்தி மூன்றாவது கம்பர்கட்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...