Skip to main content

ஆயிரம் ஸ்தோத்ரம்

               
                       
                  


காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில்
மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன
அதில் மூன்றாவது சந்தில்
கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள்
பள்ளிச்சீருடையில்
நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள்
அதன் ஐந்தாவது சந்தில்
19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட
அவள் அன்னை
விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள்.


முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார்
ஒரு அரசமரத்தடி பிள்ளையார்.
அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும்
இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார்.
வாயிலிருந்து விசிலை இறக்காமல்
ஓடியாடி பணியாற்றுகிறார்.
ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல
அந்தந்த சந்திற்கான வாகனங்களை
மிகச் சரியாக
அதனதன் வழியில் விடுகிறார்.


“privacy “  என்கிற சொல்லால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும்
ஒருவர் போனை ஒருவர் நோண்டுவதில்லை.
ஒருவர் அறையை இன்னொருவர்
துப்பறிவதில்லை.


நள்ளிரவில் சின்ன சத்தமும் துல்லியமாகிவிடும் என்பதால்
இரண்டு போன்களிலும்
DIAL PAD TUNE “ கள் “ mute “ – இல் இருக்கின்றன.



அன்னையர் தினத்திற்கு
மகள் ஒரு கட்டிமுத்தத்தை பரிசளிக்கிறாள்.
காதலர்தினத்திற்கு
அன்னை
ஒரு பற்தடத்தை
பரிசளிக்கிறாள்.
மூன்றாவது சந்தும் ஐந்தாவது சந்தும்
அதனதன் கதியில் இயங்கிக் கொண்டிருப்பதால்
கட்டிமுத்ததிற்கோ, பற்தடத்திற்கோ
ஒரு குறையும் நேர்வதில்லை.


உமைக்கினிய மைந்தன், கணநாதன்
நம் குடியை வாழ்விப்பான்.
அவனுக்குச் சொல்வோம் ஆயிரம் ஸ்தோத்ரம்.


                     
                    நன்றி : உயிர்மை : ஜூலை -2017

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...