Skip to main content

கவிதையின் விளையாட்டு - “ பழைய யானைக்கடை” நூலின் என்னுரை


                     
       சங்கத்திலிருந்து  சமகாலம் வரை கவிதைக்குள் விளையாட்டு ”  எப்படி இயங்கி வந்திருக்கிறது என்றறிந்து  கொள்ளும் விருப்பத்தில்   விளைந்ததே இந்நூல். மொழிக்குள் விளையாட்டு என்பது எது ? அது அங்கு எவ்விதம் தொழில்படுகிறது?   எந்த அளவில் விளையாட வேண்டும்?  என்பவை கொஞ்சம் சிக்கலான கேள்விகள். நகைச்சுவை, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் பரிட்சார்த்தமுயற்சி என்கிற ஒன்றையும் சேர்த்து, நான்  “விளையாட்டுஎன்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம், வினோதம், பரிட்சார்த்த முயற்சி ஆகியவற்றுடன் கொஞ்சம் துடுக்குத்தனமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.  “ இரசம் ” மனத்துக்குத் தக்க மாறும் என்பதே அறிஞர் கூற்று. நான் விளையாட்டு என்று கொள்வது உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

   இது ஓரு முழுமையான ஆய்வுநூல் அல்ல. இப்பொருளைத் தீர ஆய்வு செய்ய வேண்டுமெனில் தமிழில் இது வரை எழுதப்பட்ட எல்லா கவிதைப் பிரதிகளையும் வாசித்திருக்க வேண்டும். அதற்கு இப்பிறவி போதாது. நீங்கள் ஒரு  “ சாம்பிள் சர்வேயைஎவ்வளவு பொருட்படுத்துவீர்களோ அவ்வளவு பொருட்படுத்தினால் போதும் இப்புத்தகத்தை. எனவே இந்நூல் விடுபடல்கள் உடையதே என்பதைத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சங்கத்தை பொறுத்தமட்டிலும் அகநானுறும், நற்றிணையும் முக்கியமான விடுபடல்கள். இப்படி ஒவ்வொரு வகைமையிலும் ஏதோ ஒன்று விடுபட்டிக்கிறது. விடுபற்றவற்றில் விளையாட்டுகள் இருக்கலாம். அவை இன்னொரு ஆய்வாளனுக்கானது. இப்படி இன்னும் சிலர் இதில் இறங்கி விடுபடல்களை நிரப்பி முடித்தால் தமிழ்க்கவிதைக்குள் விளையாட்டின் இயங்குவிதம் குறித்த ஒரு முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும். அந்த ஆய்வுகளுக்கான வாயிலாக இந்நூல் இருக்கட்டும்.

    பழந்தமிழ்க்கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் அதில் என்ன உள்ளது என்பதை சுருக்கமாக சொல்லி விட்டு, பிறகு அதில் விளையாட்டு எப்படி தொழில்படுகிறது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். பழந்தமிழ்கவிதைகளை கற்க ஆசை கொள்ளும் ஒரு புதுவாசகனை கருத்தில் கொண்டு இப்படி அமைத்திருக்கிறேன். வெறுமனே குறுந்தொகையின் 18 வது பாடல் என்று தகவல் தந்துவிட்டுப் போவதில் ஒரு இன்பமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. இம்முறையில் முதலில் அவன் குறுந்தொகையை குறித்து கொஞ்சமாகவேனும் அறிந்த கொள்கிறான். அதன் பிரமாதமான வரிகள் சிலவற்றை வாசித்து விடுகிறான். இப்போது குறுந்தொகை அவனுடையதும் ஆகி விடுகிறது. அவனுடைய குறுந்தொகையில் 18 வது பாடல் என்று சுட்டுவதில் ஒரு இணக்கம் வந்துவிடுகிறது. எனவே பாரதி வரை இம்முறையை கையாண்டிருக்கிறேன்.






    கவிதைதான் என் காதலி. வசனம் இடையில் வந்தவள். ஆனால் இடையில் வந்தவள் போலவே அவள் நடந்து கொள்வதில்லை. அவளும் சரிபாதி பங்கு கேட்கிறாள். எனினும் இந்நூல் கவிதை குறித்தான கட்டுரை என்பதால் இருவருக்குமிடையே தற்காலிக சமாதானம் நிலவுகிறது
.
   நண்பர் சீனிவாசன் ஒரு முறை கணையாழி வாசகர் சந்திப்பில் உரையாற்றுமாறு அழைத்த போது, சென்னை வரை சென்று “ கச்சேரி செய்வதில் உள்ள அலுப்பால் முதலில் மறுத்தேன். மறுத்த என்னை வருந்தி அழைத்துப் பேச வைத்தார். அப்போது ஒரு கட்டுரையாக எழுதியதை மேலும் மேலும் விரித்து எழுதி உருவானதே இந்நூல். எனவே நண்பர் சீனிவாசனுக்கு என் முதல் நன்றி.

     இந்நூல் சிறுகட்டுரையாக எழுதப்பட்ட காலத்தில் முதல் வாசகர்களாக அமைந்து  தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், பெருமாள்முருகன், சாம்ராஜ், ஷாலினி ஆகியோர்.  இவர்களுக்கு என் அன்பு.

   நூலின் செம்மையாக்கத்தில் என்னை விடவும் ஆர்வத்தோடு பங்கெடுத்த நண்பர் ஏ.வி.மணிகண்டனுக்கு எனது வந்தனங்கள்.

  கடும் வேலை நெருக்கடிகளுக்கிடையேயேயும் முன்னுரை அளித்திருக்கிற நாஞ்சில் நாடனுக்கு மிக்க நன்றி

  அட்டை வடிவமைப்பிற்கான முன்னேற்பாடுகளால் என்னை பீதியடையச் செய்த ரோஹிணி மணிக்கும், நூல் வடிவமைப்பில் பொறுமை காத்தமைக்காக சுபாவிற்கும் எனது நன்றிகள்.

    குறிப்பிட்ட ஒன்றைத் தீவிரமாகத் தேடுகையில் உண்மையில் அது துலங்கி வருகிறதா ? அல்லது மறைந்து கொள்கிறதா? எனக்கு ஒரு கட்டத்தில் எல்லாமே விளையாட்டு போலவும், எதுவுமே விளையாட்டில்லை என்பதாகவும் மயங்கிக் குழம்பி விட்டது. இந்தப் புத்தகத்தை முடித்து வைக்கும் இந்நாளில் அறிவின் நரகத்திலிருந்து எட்டிக்குதித்து தப்பி ஓடுகிறேன்.

   ”நகை என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையெனில், இந்நேரம் என் உடலில் பாதி கோணித்துக் கொண்டிருக்கும். ஒருவிதத்தில் அதற்கான நன்றிக்கடனாகவும் இத்தொகுப்பைக் கருதலாம்.
 

  எழுத்தைத் தவிர வேறு மகிழ்ச்சியில்லை என்பது உண்மையில் துரதிர்ஷ்டம். ஆனால், அதை அதிர்ஷ்டம் போலவே பாவித்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.

                                      
                                             இசை

                                       இருகூர்  10/09/2017

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...