Skip to main content

நீலம்பாரித்தல்



   ஓர் அதிகாலையில் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்  பாத்ரூமிலிருந்து பாய்ந்து வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்தேன். ஒரு காலத்தில் “ சத்துணவு” என்று எங்கள் நண்பர் குழாமால் கேலி செய்யப்பட்ட அதே சம்பாரவை. இன்றோ என் தினசரி காலை உணவு. “சத்துணவு” என்கிற விளி எப்படிக் கேலியானது என்பது இன்று வரை விளங்கவில்லை. அவசர அவசரமாக அள்ளி வாயில் திணிக்கையில்தான் கவனித்தேன் என் கையை. அது கருநீலத்தில் இருந்தது உடனே இடது கைக்கு ஓடினேன். அதுவும் அப்படியே இருந்தது. எதையோ தொட்டுவிட்டு ஒழுங்காக கழுவாமல் அமர்ந்து விட்டேன் போல ? திரும்பவும் எழுந்து கைகளை அழுத்திக் கழுவி விட்டு வந்தமர்ந்தேன். ரயில்வேறு தூரத்தில் கூவிக்கொண்டிருந்தது.
  இரண்டு வாயிற்குப் பிறகு திரும்பவும் கைகளைப் பார்த்தேன். எதுவும் மாறவில்லை. கருப்பு குறைந்து நீலம் கூடிவிட்டது போல் தோன்றியது. கட்டைவிரல் மேட்டில் கொஞ்சம் வெளிரிய இளமஞ்சளும் பூத்திருந்தது. எனக்கு எல்லாம் விளங்கி விட்டது.
   சமீப நாட்களில் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். என்னளவில் கொஞ்சம் கடுமையானதுதான். பத்து கிலோ குறைத்தத்தில் நெஞ்செலும்பு வெளித்தள்ளி விட்டது. ஆனால் இந்தக் கட்டுப்பாடு எந்த மருத்துவரின் ஆலோசனையின் படியும் மேற்கொள்ளப் படவில்லை. எனக்கு நானே வைத்தியன் ஆகி என் உடலைக் கொண்டு நானே நிகழ்த்திய ஆராய்ச்சி இது. சர்க்கரையை நிறுத்தி விட்ட தைரியத்தில் பேக்கரி பண்டங்களுக்கும் விடை அளித்திருந்தேன். விளைவு நன்றாகவே இருந்தது. ஆனால் கூடவே வந்துவிட்டது போலும் உபவிளைவு.
   இரண்டு வருடங்களாகவே தேநீரில் “வித் அவுட்டுக்கு” மாறியிருந்தேன். சமீபமாக சர்க்கரை கலந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். இப்படி சுத்தமாக சர்க்கரையை விலக்குவது சரியா? என்று சில நண்பர்கள் எழுப்பிய கேள்வியை நான் பொருட்படுத்தவில்லை. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருந்ததால் தொடர்ந்து சர்க்கரை புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தேன். இத்தனைக்கும் நானொரு சர்க்கரைப் பிரியன். சிறுவயதில் 20 கம்மர்கட்டுகள் இல்லாமல் நான் சினிமாவுக்குப் போனதில்லை. இடைவேளைக்கு முன் பத்து. பின் பத்து என்பது கணக்கு. கம்மர்கட்டுக்கு சைட்டிஷ் சினிமாவா? சினிமாவுக்கு சைட்டிஷ் கம்மர்கட்டா என்பது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.         
   நீலம் மறைவது போல் தெரியவில்லை.  அப்படி இனிப்பில் ஊறித்திளைத்த உடலை பட்டினி போட்டு வாட்டியதின் விளைவு இப்படி கைகளில் வந்து ஏறியிருக்கிறதா? அல்லது உடலுக்குள் முக்கியமான உறுப்பொன்று  கொஞ்சம் கொஞ்சமாய் அழுகி வந்து, அழுகல் முற்றிவிட்டதன் சாட்சியா இது?
 அடுத்து செய்ய வேண்டியது என்ன? எந்த மருத்துவரைப் போய் பார்ப்பது? எதனால் இப்படி ஆகிவிட்டது? முந்தைய இரவு முழுக்கவும் தூக்கமின்மையால் அவதியுற்றிருந்தேன். அதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பிருக்குமா? அதற்கு முந்தைய நாள் இரவு ரெஸ்டாரெண்டில் பரிமாறப்பட்ட காடை வறுவலில் ஏதும் பிழைபட்டுவிட்டதா? எண்ணற்ற கேள்விகள். தீராத குழப்பங்கள்.
   மனம் திருந்தி குற்றவுணர்ச்சியில் உழலும் ஒரு கொலைகாரன் தன் கைகளை கண்டு கண்டு குமைவதைப் போலே என் கைகளைக் கண்டேன். என் பாவங்கள் தான் ஒவ்வொரு விரலிலும் ஏறியிருக்கும் இந்த நீலவண்ணங்கள். வாழ்வு குறித்த திட்டங்கள்,  பிரம்மாண்ட கற்பனைகள் யாவும் “ பட்” என்று வெடித்து வீடு முழுக்கச் சிதறிவிட்டன. என் தெய்வமே! நான் அப்படி என்னதான் செய்து விட்டேன்?  எந்தக் குருடனுக்கு புதைகுழிக்கு வழி சொன்னேன்? எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன்? எவன் தொடைச்சதைக்கு நன்றி மறந்தேன்? எதற்கிந்த தண்டனை?
  நோயும் ஞானமும் இரட்டைப் பிறவிகள் போலும்? நோய் கண்ட சில நிமிடங்களிலேயே ஞானத்தின் தாடி என் முகமெங்கும் மண்டிவிட்டது. இந்த வாழ்வுக்கு என்னதான் பொருள்? இத்தனையையும் கையுள் வைத்து ஆட்டிப் பார்க்கும் அவன் யார்? எங்கிருந்து வந்தேன்? எதற்காக வந்தேன்? எங்குதான் போகப் போகப்போகிறேன்? அடர்ந்து செறிந்த இருளுள் ஆழத்திற்குச் சென்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், “நேரமாகலையா?” என்று வாசலில் நின்று அழைத்த மனைவியின் குரல் கேட்டுத் திரும்பினேன். அப்போதுதான்  எதேச்சையாக வாஷிங் மெசினைப் பார்த்தேன்.  அதில் புதிதாக வாங்கிய துண்டு காய்ந்து கொண்டிருந்தது. ஒரு காதிபவனில் 20%  தள்ளுபடியில் ரூ.35 க்கு வாங்கியது. நீலக்கலர். இன்பத்தின் மின்னலொன்று என் இதயத்தில் வெட்டி முறிந்தது. அதை எடுத்து தண்ணீரில் நனைத்துப் பார்த்தேன். வானத்தை வாளியில் முக்கி அழுத்தியது போல அவ்வளவு நீலம் பிரிந்து வந்தது.

       ரயில் போய்விட்டதுதான். ஆனால் உயிர் கூட்டிற்குத் திரும்பி விட்டது.

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான