Skip to main content

இசை கவிதைகள் - அகழ்


கார் எனில் மயில்

“மயில் தோக விரிச்சு நிக்குது”
என்றாள்.

“மயிலா…. எங்கே… ?”
என்றேன்
திகைத்தபடி.

“எங்கும் “
என்றாள்
சிரித்தபடி.

OOO

இதில் மறைஞானம் ஒன்றுமில்லை தம்பி!

நான் பிறக்கும் போதே
பாதி மின்னலோடு பிறந்தேன்
மின்னும் எதனுடனும்
சட்டெனப் பின்னிக் கொள்கிறது
என் மின்னல்

நீ பிறக்கும் போதே
பாதி மலரொடு பிறந்தாய்
மலரைக் காண்கையில்
அவிழ்வது அதுதான்

அவள் கொஞ்சம்
அந்திப் பொன்
அந்தி அந்தியில் கரைந்து கொண்டிருக்கிறது

அவனே எண்ணிக் கொண்டிருக்கும்படி
அப்படியில்லை அவன்
கண்ணீர்தான் கண்ணீரை
அணைத்துக் கொள்கிறது

இரண்டு பாதிகள்
வட்டம் காணும் திருநாளில்
வந்து நிற்கிறது
பெளர்ணமி

OOO

களம் பல கண்டவரின் கடைசிச் சொற்கள்

அவர் வீட்டிலிருந்து கிளம்புகையில்
இனி யோசிக்க ஒன்றுமில்லை
என்கிற முடிவுக்கு வந்திருந்தார்

ஆனால்
வழியெங்கும் யோசித்துக் கொண்டே வந்தார்

அந்தப் பாலத்தின் மீது நின்று கொண்டு
மேலும்
ஒரு மணி நேரம்
தீவிரமாக யோசித்தார்.

இனி யோசிக்க ஒன்றுமில்லை
என்பது உறுதியானவுடன்
“கடைசியில் எல்லாம்
சாதாரணக் காதல்கதைகள் தானா?” என்று
குனிந்தவாக்கில்
ஏரித் தண்ணீரை நோக்கிக் கேட்டார்.
பிறகு
அவ்வளவு உயரத்திலிருந்து
அதற்குள் பாய்ந்தார்.

“கடைசியில் எல்லாம் சாதாரணக் காதல் கதைகள்தான்”
என்று சொல்லியிருக்கலாம்.

இப்போது பாருங்கள்….
நாம் திரும்பவும்
முதலிருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது.

OOO

ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை

நீ
தலைகுனிந்து வணங்குகையில்
சுடர்
விளக்கிலிருந்து
உன் கன்னங்களுக்குத் தாவுகிறது.

தீ இனிது;
கன்னங்கள் இனியன;
உயிர் சுவையுடையது;

தீ நின்று எரியட்டும்!

தீயை வாழ்த்துகிறோம்!
கன்னங்களைப் புகழ்கிறோம்!

கன்னங்களில் எரிகிற தீயே !
உன்னைத் தொழுகிறோம்.

OOO

டிவி பார்க்கையில் ஆழமாக சிந்தித்தல் தீங்கு விளைவிக்கும்

இரண்டு நாட்களாக  வானம்
மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்
மாலையிலிருந்து மழை விட்டுவிட்டு
பெய்யத் துவங்கலாம்.

எப்போது விடும்
எப்போது பெய்யும்
என்பதைச்  சொல்ல முடியாது
எங்கு பெய்யும், எங்கு விடும் என்பதையும்

சில இடங்களில் மிதமான மழையும்
சில இடங்களில் கன மழையும்
சிலதில் அதி கன மழையும்
ஓரிரு இடங்களில்
மிக அதி கனமழையும் கொட்டக் கூடும்

தாழ்வான பகுதிகளில். வசிப்போர் பத்திரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மண் சரிவு காரணமாக
சாலையில் திடீர் பள்ளங்கள் உருவாக
வாய்ப்புண்டு

புயல் காரணமாக
மரங்கள் அடியோடு சாய வாய்ப்புண்டு
மேலும்
மரத்தடியில் நின்றால்
மின்னல் தாக்கவும் வாய்ப்புண்டு.

மேக வெடிப்பும் நிகழலாம் என்று நம்பப்படுகிறது

மின் கம்பிகள் பற்றி எரியும்
அறுந்து விழும்

உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளன
ஹெலிகாப்டர்கள் பழுதானால் உடனடியாக சரி செய்யப்படும்

எதுவெல்லாம் நிகழ வாய்ப்பிருக்கிறதோ,
அதுவெல்லாம் நிகழ் வாய்ப்புண்டு

ச்சீ, என்ன இது குழந்தை மாதிரி…
வானிலை அறிக்கைக்குப் போய்
யாராவது அழுவார்களா செல்லமே?

நன்றி : அகழ்

https://akazhonline.com/?p=8756

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...