அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க விறைசெறி குழலி ஓங்க மெளலி ஏறியது இராமனின் முடியில் வீசிக் கொண்டிருந்த கவரியில் ஒன்று மெல்ல மெல்ல ஓய்ந்து அசையாது நின்றுவிட்டது போற்றி கோஷங்களும் கொண்டாட்டக் கூச்சல்களும் ஆரவாரித்து ஓய்ந்த பொழுதில் தனித்து அதிர்ந்ததொரு உறுமல் சாமரதாரி ஒருவனின் பிளந்த வாயிலிருந்து காற்றின் கடு ஊளை அப்போது அவையை நடுநடுக்கி உலுக்கியது ஒருத்தியின் கூப்பாடு “ அய்யோ….! “ “ அய்யய்யோ…!” புவியெலாம் புரக்கும் கொற்றவன் அந்த 'அய்யோ ' வின் காலில் சரிந்து விழுகிறான் பட்டுத் தெறித்து தூரப் பறந்து பொங்கு கடலில் வீழ்கிறது அவன் மணிமுடி கடல், அதைத் தன் இருண்ட ஆழங்களுக்குள் இழுத்துச் செல்கிறது. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments