Skip to main content

அதனாலென்ன...




அதனாலென்ன?

விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன.
அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில்
இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!.....
நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும்.
எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே...


````````````````````````````````````````````````````


ஓயாத திகில்




என் உடல் ஆம்புலன்ஸ்
தலை சைரன் பல்ப்
மனம் இடுது நாசஊளை.


`````````````````````````````````````````````````


999 வாழ்க்கை


இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கடிந்து கொள்கிறாயே
நானென்ன அவ்வளவு நீதிமானா?
அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன்.


`````````````````````````````````````````````````````````````````````````````


உன்னை அடைவது ...


உன்னை முத்தமிட வேண்டியே
உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன்.
உன் இதழ்களை முத்தமிடுவது
உன்னை முத்தமிடுவதாகுமா
எனத் தெரியவில்லை.
உன்னை அடைவதற்கென்றே
உன் உடலை அடைந்திடத் தவிக்கிறேன்.
உன் உடலை அடைவது
உன்னை அடைவதாகுமா
எனத் தெரியவில்லை.


`````````````````````````````````````````````````````````````````````````


ஒரு ஒழியாத சப்தம்


பேசிக்கொண்டிருக்க பேசிக்கொண்டிருக்க
ஒரு காதல்
தன்னை பட்டென துண்டித்துக்கொண்டது.
அப்போது அவன் காதில்
“ங்கொர்” என்ற ஒரு சத்தம் கேட்டது.
அது முதலாய் அவன் ஆயுள்தீரும் வரை
அச்சத்தம் ஒழியவேயில்லை.
காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால்
அதை சரி செய்ய கூடவில்லை.


````````````````````````````````````````````````````````````````````````````````````


ஒரு பறவையை வழிஅனுப்புதல்


ஒரு பறவை கூட்டை விட்டு
வெளியேறும் விருப்பதைத் தெரிவிக்கையில்
நீங்கள் அதற்கு தகுந்த காலநிலையை
தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.
அதன் சிறகுகளை ஒரு முறை
சோதித்துக் கொள்வது நல்லது.
தேவை எனில்
அதன் வலிமையை கூட்டும் வழிகளையும் கற்பிக்கலாம்.
அடிக்கடி அதை தடவிக்கொடுப்பதை
கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.அதன் கண்களை தவிர்த்து விட வேண்டும்.
வேடனின் தந்திரங்கள் மற்றும் அம்புகளின் கூர்மை பற்றி
கனிவோடு எச்சரிக்க வேண்டும்.
போகும் வழியில் அதற்கு பசிக்குமென்பதும்
உங்களுக்கு தான் நினைவிருக்க வேண்டும்
வழக்கம் போல் தங்கள் அலகால் புகட்டாமல்
ஒரு தட்டில் வைத்து நீட்ட வேண்டும்.
பிறகு வானத்தைப் பார்க்கும் சாக்கில்
அண்ணாந்து பார்க்காதிருக்க வேண்டும்.


``````````````````````````````````````````````````````````````````````````````


நீ உன் முத்தத்தை உதட்டிற்கு கொண்டு வா


ரயில் வந்து விட்டது.
அதற்கு ஒன்றும் தெரியாது.
அது
வரும் போகும்.


``````````````````````````````````````````````````````````````````````


நீயொரு இளமஞ்சள்

உனதிடையில் ததும்புகிற
இளமஞ்சள் நதி
என் கனவேறி வந்தது.
இது ஒரு இளமஞ்சள் கனா.
இது ஒரு இளமஞ்சள் இரவு.
இள மஞ்சள் வெள்ளதில்
மிதக்கிறது இவ்வறை.


```````````````````````````````````````````````````````````````````````````


மகா ரப்பர்


பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இது போல்
2.3.2002 ஐ அழிக்கமுடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்.


`````````````````````````````````````````````````````````````````````


Comments

அருமை .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
selventhiran said…
ப்ரிய சகா, கவிதைகள் கண்டேன். மகிழ்ந்தேன்.

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...