Skip to main content

அதனாலென்ன...




அதனாலென்ன?

விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன.
அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில்
இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!.....
நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும்.
எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே...


````````````````````````````````````````````````````


ஓயாத திகில்




என் உடல் ஆம்புலன்ஸ்
தலை சைரன் பல்ப்
மனம் இடுது நாசஊளை.


`````````````````````````````````````````````````


999 வாழ்க்கை


இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கடிந்து கொள்கிறாயே
நானென்ன அவ்வளவு நீதிமானா?
அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன்.


`````````````````````````````````````````````````````````````````````````````


உன்னை அடைவது ...


உன்னை முத்தமிட வேண்டியே
உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன்.
உன் இதழ்களை முத்தமிடுவது
உன்னை முத்தமிடுவதாகுமா
எனத் தெரியவில்லை.
உன்னை அடைவதற்கென்றே
உன் உடலை அடைந்திடத் தவிக்கிறேன்.
உன் உடலை அடைவது
உன்னை அடைவதாகுமா
எனத் தெரியவில்லை.


`````````````````````````````````````````````````````````````````````````


ஒரு ஒழியாத சப்தம்


பேசிக்கொண்டிருக்க பேசிக்கொண்டிருக்க
ஒரு காதல்
தன்னை பட்டென துண்டித்துக்கொண்டது.
அப்போது அவன் காதில்
“ங்கொர்” என்ற ஒரு சத்தம் கேட்டது.
அது முதலாய் அவன் ஆயுள்தீரும் வரை
அச்சத்தம் ஒழியவேயில்லை.
காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால்
அதை சரி செய்ய கூடவில்லை.


````````````````````````````````````````````````````````````````````````````````````


ஒரு பறவையை வழிஅனுப்புதல்


ஒரு பறவை கூட்டை விட்டு
வெளியேறும் விருப்பதைத் தெரிவிக்கையில்
நீங்கள் அதற்கு தகுந்த காலநிலையை
தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.
அதன் சிறகுகளை ஒரு முறை
சோதித்துக் கொள்வது நல்லது.
தேவை எனில்
அதன் வலிமையை கூட்டும் வழிகளையும் கற்பிக்கலாம்.
அடிக்கடி அதை தடவிக்கொடுப்பதை
கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.அதன் கண்களை தவிர்த்து விட வேண்டும்.
வேடனின் தந்திரங்கள் மற்றும் அம்புகளின் கூர்மை பற்றி
கனிவோடு எச்சரிக்க வேண்டும்.
போகும் வழியில் அதற்கு பசிக்குமென்பதும்
உங்களுக்கு தான் நினைவிருக்க வேண்டும்
வழக்கம் போல் தங்கள் அலகால் புகட்டாமல்
ஒரு தட்டில் வைத்து நீட்ட வேண்டும்.
பிறகு வானத்தைப் பார்க்கும் சாக்கில்
அண்ணாந்து பார்க்காதிருக்க வேண்டும்.


``````````````````````````````````````````````````````````````````````````````


நீ உன் முத்தத்தை உதட்டிற்கு கொண்டு வா


ரயில் வந்து விட்டது.
அதற்கு ஒன்றும் தெரியாது.
அது
வரும் போகும்.


``````````````````````````````````````````````````````````````````````


நீயொரு இளமஞ்சள்

உனதிடையில் ததும்புகிற
இளமஞ்சள் நதி
என் கனவேறி வந்தது.
இது ஒரு இளமஞ்சள் கனா.
இது ஒரு இளமஞ்சள் இரவு.
இள மஞ்சள் வெள்ளதில்
மிதக்கிறது இவ்வறை.


```````````````````````````````````````````````````````````````````````````


மகா ரப்பர்


பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இது போல்
2.3.2002 ஐ அழிக்கமுடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்.


`````````````````````````````````````````````````````````````````````


Comments

அருமை .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
selventhiran said…
ப்ரிய சகா, கவிதைகள் கண்டேன். மகிழ்ந்தேன்.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...