Skip to main content

நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காடு





இன்று அதிகாலை பீக்காட்டுக்கு போனபோது
ஒரு டாங்கியைப் பார்த்தேன்.
ஆமாம் அதன் பெயர் டாங்கி தான்
பீரங்கி அல்ல.
பச்சை இலையும் காயந்த சருகும்
சேர்ந்திருக்கும் உடுப்பில்
அதில் இருவர் அமர்ந்திருந்தனர்.
இலங்கையில் போர் நடப்பது எனக்கு தெரியும்.
டி.வி யில் காட்டுகிறார்கள்.
இந்தக் காட்டை மறைத்து நிற்கும் கொட்டாயில்
நான் நிறைய சண்டைகளைப் பார்த்திருக்கிறேன்.
கடைசி சீனில் "டுமீல்" "டுமீல்" என்று
துப்பாக்கிகள் வெடித்திருக்கின்றன.
எதையோ வாயில் கடித்துத் துப்பிவிட்டு
குண்டுகளை வீசுவார்கள்.
நிலம் பிளந்து மண் எழும்பும்.
ஒரு மனிதன் அந்தரத்தில் வெடித்து சிதறுகையில்
நாங்கள் சீக்கி அடித்திருக்கிறோம்.
அந்த கொட்டாய்க்கு பின்னால் தான்
இன்று நீட்டிய குழலோடு ஒரு டாங்கி நிற்கிறது.
எனக்கு தெரியும்
சினிமாவில் எல்லாமே டூப்பு தான்.
ஆனால், நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டுக்குளிருந்து
ஒரு டாங்கி உருண்டு வருவதென்றால்
இது கனவு தானே நண்பர்களே....
கனவு தானே..
கனவு தான்.
ஒரு வேட்டு போட்டால் ஓடி விடாதா இந்த வன விலங்கு.
ஆனால் இது கனவு தானே?
கனவு தானே..
நண்பர்களே இது கனவு தானே..
கனவு தான்.
ஆறுமுகம் எதிரே வருகிறானே..?
பேடிப்பயலே.. அவன் கனவில் வருகிறான்..
ஆமாம்..இது கனவு தான்.. கனவு தான்..
கணவன் தூர்கனவில் உழல்கையில்
மல்லாந்து கிடக்கிற பதிவிரதை....!
என்னை எழுப்படி நாயே...
கனவு ... இது கனவு.. கனவு தான்
அம்மா தாளிக்கும் மணம் வருகிறது.
பாதகமில்லை... கனவு தான்
இது கனவுதானே அம்மா...
அம்மா! இது கனவு தானே..
அடுப்படியில் என்ன புடுங்குகிறாய்
சீக்கிரம் வந்திந்த அறைக்கதவை உடை..
லேசாக பீ வாடை வருகிறதா..?
இல்லையில்லை.
இது கனவு தான்..
அய்யோ..
இது கனவு தான்

Comments

கவிதையில் புதுமையை முயன்றிருக்கிறீர்கள்.அதில் வெற்றி யும் பெற்றுள்ளீர்கள். ஆனால் உங்கள் கவிதைக்கு எப்போதும் இசை அமைக்கும் இளையராஜாவை விடுத்து வித்யாசாகரை அணுகியிருப்பது என் போன்ற ராஜா ரசிகனுக்கு கவிதையுடன் பொருத்தப்பாடு கொள்வதில் சற்று சோம்பேறித் தனத்தை நல்குவதாக உள்ளது.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...