Skip to main content

அந்தப் பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது


கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை
உடைகளில் கிழிசலேதுமில்லை
ஆனாலும் அந்தக் கண்கள் ..
அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை

அவன் உணவு
தேக்கு மரக்கதவுகளாலும்
சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும்
இரண்டு கொழுத்த நாய்களாலும்
தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள்
வாழ்கிறது.

அந்த வீதியில் எத்தனையோ
வீடுகள் திறந்திருக்கும் போதிலும்
பன்னெடுங்காலமாக
அவன் அந்த இரும்பு கிராதிக்கு
கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான்.

காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து,
நாய்களை கொன்று வீசி விட்டு
தேக்குமரக்கதவுகளை
உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில்
அவன் புனையும் பாடல்கள்
அவனைப் போலவே
இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன.
அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான்
அல்லது அந்தப் பசியை.
அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது.
அது வாழட்டும்
காணவே காணாத அந்தப் பிச்சை
அதுவும் வாழட்டும்
அந்த நாய்கள்
அவை வாழ்வாங்கு வாழட்டும்.

Comments

ramalingam said…
நல்ல கவிதை. நல்ல புகைப்படம். நல்ல தலைப்பு. புனைப் பெயர்தான் நன்கு வறுக்கப்படாத கோழி போல் இடிக்கிறது.
இப்படி தன்னெழுச்சியான சுதந்திர வரிகளை இசை மட்டுமே எழுத முடியும். சபாஷ்!

சமயவேல்
இசை, நான் உங்கள் கவிதைகளின் விசிறியாகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.:)))

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...