Skip to main content

அந்தப் பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது


கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை
உடைகளில் கிழிசலேதுமில்லை
ஆனாலும் அந்தக் கண்கள் ..
அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை

அவன் உணவு
தேக்கு மரக்கதவுகளாலும்
சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும்
இரண்டு கொழுத்த நாய்களாலும்
தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள்
வாழ்கிறது.

அந்த வீதியில் எத்தனையோ
வீடுகள் திறந்திருக்கும் போதிலும்
பன்னெடுங்காலமாக
அவன் அந்த இரும்பு கிராதிக்கு
கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான்.

காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து,
நாய்களை கொன்று வீசி விட்டு
தேக்குமரக்கதவுகளை
உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில்
அவன் புனையும் பாடல்கள்
அவனைப் போலவே
இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன.
அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான்
அல்லது அந்தப் பசியை.
அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது.
அது வாழட்டும்
காணவே காணாத அந்தப் பிச்சை
அதுவும் வாழட்டும்
அந்த நாய்கள்
அவை வாழ்வாங்கு வாழட்டும்.

Comments

ramalingam said…
நல்ல கவிதை. நல்ல புகைப்படம். நல்ல தலைப்பு. புனைப் பெயர்தான் நன்கு வறுக்கப்படாத கோழி போல் இடிக்கிறது.
இப்படி தன்னெழுச்சியான சுதந்திர வரிகளை இசை மட்டுமே எழுத முடியும். சபாஷ்!

சமயவேல்
இசை, நான் உங்கள் கவிதைகளின் விசிறியாகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.:)))

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.