Skip to main content

நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷி

              



நம் அறவுணர்வு ஒரு அப்புராணி
நாம் வரைந்து வைத்திருப்பது போல்
அதற்கு புஜபலமில்லை.

நம் அறவுணர்வு ஒரு மெல்லிய பூனைக்குட்டி
ஒரு துண்டுமீனின் வாசனைக்கு
அது  கூப்பிடும் இடத்திற்கு வருகிறது.

நாம் ஒருவரையொருவர்
அடித்துத் தின்கையில்
அது மாரடித்துக் கதறியது
நாம் அதன் முன்னே
வலுத்தது வாழும்
என்கிற நியதியை முன்வைத்தோம்.
னாவிற்கு  ”னா சரியாக இருப்பதால்
அதை ஏற்றுக்கொள்ளும் படியாகிவிட்டது அதற்கு.

நாம்வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிக்கான
வரிசையில் நிற்கையில்
அது வெகுண்டெழுந்து சீரியது.
நாம் அதை
உட்கார வைத்துப் பேசினோம்
பிறகு அதுவே தான்
சும்மாடு தூக்கி
வீடு வீடாக இறக்கியது.

பதினோரு மணிக்காட்சிக்குப் போவதில்
நம் அறவுணர்வுக்கு சிக்கலொன்றுமில்லை.
ஆனால்
வெள்ளைப்பொடி கலந்து தரப்பட்ட குளிர்பானத்தைப் அருந்தி
அப்பாவிப்பெண்ணொருத்தி மயங்கிச் சரிகையில்
அது எழுந்து கொண்டு
போய்விடலாம்”… ”போய்விடலாம்
என்று நச்சரித்தது.
அப்போது அதன் காதில் நுட்பமான நீதியொன்று கிசுகிசுக்கப்பட்டது.
அதைக் கேட்டதும் அதற்கு குஷி பிறந்து விட்டது.
அதற்குள் மேலாடையும் கழற்றப்பட்டு விட்டது.

 அறவுணர்வை கைதொழ வேண்டி
 பழக்கதோஷத்தில்
 நாம் அண்ணாந்து நோக்குகையில்
 அது நம் காலடியில் நின்று கொண்டு
தொடையைச் சொரிகிறது.



          நன்றி ;  காலச்சுவடு – ஆகஸ்ட் -2014

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...