Skip to main content

நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷி

              



நம் அறவுணர்வு ஒரு அப்புராணி
நாம் வரைந்து வைத்திருப்பது போல்
அதற்கு புஜபலமில்லை.

நம் அறவுணர்வு ஒரு மெல்லிய பூனைக்குட்டி
ஒரு துண்டுமீனின் வாசனைக்கு
அது  கூப்பிடும் இடத்திற்கு வருகிறது.

நாம் ஒருவரையொருவர்
அடித்துத் தின்கையில்
அது மாரடித்துக் கதறியது
நாம் அதன் முன்னே
வலுத்தது வாழும்
என்கிற நியதியை முன்வைத்தோம்.
னாவிற்கு  ”னா சரியாக இருப்பதால்
அதை ஏற்றுக்கொள்ளும் படியாகிவிட்டது அதற்கு.

நாம்வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிக்கான
வரிசையில் நிற்கையில்
அது வெகுண்டெழுந்து சீரியது.
நாம் அதை
உட்கார வைத்துப் பேசினோம்
பிறகு அதுவே தான்
சும்மாடு தூக்கி
வீடு வீடாக இறக்கியது.

பதினோரு மணிக்காட்சிக்குப் போவதில்
நம் அறவுணர்வுக்கு சிக்கலொன்றுமில்லை.
ஆனால்
வெள்ளைப்பொடி கலந்து தரப்பட்ட குளிர்பானத்தைப் அருந்தி
அப்பாவிப்பெண்ணொருத்தி மயங்கிச் சரிகையில்
அது எழுந்து கொண்டு
போய்விடலாம்”… ”போய்விடலாம்
என்று நச்சரித்தது.
அப்போது அதன் காதில் நுட்பமான நீதியொன்று கிசுகிசுக்கப்பட்டது.
அதைக் கேட்டதும் அதற்கு குஷி பிறந்து விட்டது.
அதற்குள் மேலாடையும் கழற்றப்பட்டு விட்டது.

 அறவுணர்வை கைதொழ வேண்டி
 பழக்கதோஷத்தில்
 நாம் அண்ணாந்து நோக்குகையில்
 அது நம் காலடியில் நின்று கொண்டு
தொடையைச் சொரிகிறது.



          நன்றி ;  காலச்சுவடு – ஆகஸ்ட் -2014

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...