Skip to main content

ஐயோ… இந்தக் கரிப்பு !




எனக்கு எம்ஜியாரை அறவே பிடிக்காது
அதிகாலையிலேயே
அவர் கவுண் உடையில் தோன்றி
ஏதோ சூளூரைத்துக்கொண்டிருந்தார்.
எனவே சேனலை மாற்றினேன்.
மாற்றிய கையோடு  எதேச்சையாய்
கண்ணாடி பார்க்க
அது ரசமிழந்து உளுத்திருந்தது.
அதை மாற்றினேன்.
அழுக்கு அரசாளும் சீப்பை மாற்றினேன்.
இந்த பாத்ரூம் பைப்பை மாற்ற வேண்டுமென்று
பல்லூழிகளாக எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று அதை மாற்றினேன்.
அண்ணாந்து நோக்க
COFFE- யும் , தினசரியுமாக
பால்கணியில் வீற்றிருந்தான் எதிர்வீட்டு சீமான்.
அவனை மாற்றினேன்.
என் மொபட்டை
பள்ளத்துள் ஒதுக்கிவிட்டு பறக்கிறது ஒரு “ SCORPIO”
அதை சைக்கிளாக மாற்றினேன்.
பணிமனையில் பக்கத்துசீட்டில்
எப்போதும்
ஓர் “ அப்போது அலர்ந்த தாமரை “
அதை மாற்றினேன்.

உணவுவேளையில்
சோற்றுப்பொதி திறந்து அமர்ந்தால்
10 வாழ்க்கைகான உப்பை
அள்ளிக் கொட்டியிருந்தாள்  பத்தினி.
அந்த ரிமோட்டை
என் நெற்றிப்பொட்டில் வைத்து
ஒரு அழுத்து அழுத்தினேன்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...