Skip to main content

மொழி



         
 “ feel good movies” என்கிற பதத்துடன் கூடவே நினைவில் எழும் படங்களில் பிரதானமானது “மொழி”. பிருத்விராஜின் முகத்திலும், கொஞ்சு தமிழிலும் இயல்பிலேயே ஒரு “feel good “ உண்டு. ஆனால் படத்துக்கு இந்த மென் உணர்வை வழங்கும் காரணி எதுவென்று அவ்வளவு தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. ஒரு வேளை அது ஒன்றாக இல்லாமல் பலவாக இருக்கலாம். ஒருவர், “ சாலையின் கறுப்பு-வெள்ளை கோடுகளை கீ- போர்டாக்கி ஆடும் நடனத்தில் மகிழ்ந்தாரெனில், இன்னொருவர் அந்த உயர்தர அப்பார்ட்மெண்ட் வீட்டின் கலையழகிலும், அந்த “ bean bag “ –ன் சொகுசிலும்” மயங்கி இருக்கலாம். ஓர் ஊமைப்பெண்... அவளைக் கண்டு காதலுற்று பிரிந்து வருந்தி கடைசியில் சுபமாக கைபிடிக்கும் ஒரு இசைக்கலைஞன்.. இவர்கள் இருவரைப்பற்றிய படம் என்று எளிமையாக சொல்லலாம். அவன் சாதாரண மொழியில் புழங்குபவன் கூட அல்ல, இசையின் மொழியில் புழங்குபவன்.. அவளோ பேசவே முடியாதவள் எனும் போது படத்தின் கனம் கூடுகிறது. அம்மாவையும் தன்னையும் நிராதரவாக விட்டுவிட்டு அப்பா வேரொருத்தியோடு போய்விடும் போது, ஸ்தம்பித்து போகிறாள் நாயகி. + 2 படிக்கும் தன் பையன் சாலை விபத்தில் பலியான 1984 –லேயே ஸ்தம்பித்து நின்று விடுகிறார் ஒரு “professor “. இருவரும் இந்த வாழ்க்கைக்கு எதிராக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். படம் முடியும் தறுவாயில் ”பெரிய அழுகைக்குப்” பின் இந்த இருவரும் ஸ்தம்பித்தலில் இருந்து இயக்கத்திற்கு வருகிறார்கள்.மொழி படத்தை இப்படி பார்க்கையில் இன்னும் ரசமாக தோன்றுகிறது.
          படத்தில் ஜோதிகா, ப்ரித்வி, பிரகாஷ்ராஜ் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஜோதிகா ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்களெனினும், என் தனிப்பட்ட ரசனையில் “மொழி” என்றவுடன் நினைவுக்கு வருவது எம்.எஸ்.பாஸ்கரின் முகம்தான். கூடவே “ mark my words “ என்கிற புரபெசர் தனமான வசனமும். முதல் காட்சியில் தொடங்கி படம் முடியும் வரை ரசிக்கும்படியான நகைச்சுவைத்துணுக்குகளை தாராளமாக வைத்துள்ளார் விஜி. கூடவே, படத்தின் கதையோட்டத்திற்கு துணை செய்யும், அதன் மென்மைத்தன்மையை போற்றிப் பாதுகாக்கும் வசனங்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் தனக்கு எந்த மாதிரி மனைவி வேண்டும் என்பது பற்றி நாயகன் நாயகியிடம் உரையாடும் காட்சியின் வசனங்களை சொல்லலாம். அக்காட்சியில் “ அவ என்ன புரிஞ்சிருக்கறவளா இருந்தாவே ...என்னோட இசை அவளுக்கு புரிஞ்சிறும்..” என்று தீர்க்கமாக சொல்கிறார் ப்ரித்வி. இவ்வசனத்தை இந்த வாழ்க்கையின் குளறுபடிகளுக்குள் போட்டு குழப்பிக்கொள்ளாமல் “கேட்க நன்றாக இருக்கிற படியால்” ரசிக்கலாம்.
    பாஸ்கரின் பாத்திர படைப்பிற்காகவும், அப்பாத்திரத்தை மைய பாத்திரமான நாயகிக்கு அருகே, அதே அளவு கனத்துடன் படைத்த நேர்த்திக்காகவும் ராதாமோகனுக்கு என் ப்ரியங்கள்.
                                 நன்றி : அந்திமழை- நவம்பர்-2015

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...