Skip to main content

சுபம்




          
அவன் இங்கு வந்ததே
அந்த வெள்ளிக்கிழமைக்காகத் தான்.
அதன் முலையழுந்த அணைக்கத்தான்.
புதன் வரை  பொறுத்துவிட்டான்.
அதற்கு மேல் ஆகவில்லை.
இந்த வியாழன் ஓர் இடைஞ்சல்
ஒரு வாய்க்காலை தாண்டிக் குதிப்பதைப் போலே
அதை கடந்து விடத் துடித்தான்
தன்னை ஒருவன் தாண்டிப் போவதை பொறாது
 வியாழன் வாய் பிளந்து கத்தியது  .
வண்டி நிறைய ஆட்களை அனுப்பியது
காதலின் கனலி
சில மண்டைகளை உடைத்துப் போட்டான்
சில கால்களை முறித்துப் போட்டான்
சில தலைகளை திருப்பி வைத்தான்
கடைசியில் ஒரு தந்திரன்
புதனின் கழுத்தில் கத்தியை வைத்து பிடித்துக்கொண்டான்
காலம் ஸ்தம்பித்து நின்று விட்டது
வேறு வழியற்ற காதலன்
 “வெள்ளி வேண்டும்..” , “ வெள்ளி வேண்டும் “
என்றவன் காலில் விழுந்து கதறினான்
வெற்றி தந்த களிப்பில்
அவன் அண்ணாந்து சிரிக்க,
கண் பிழைத்த அக்கணத்தில்
அவன் கால்களை பற்றியிழுத்து
ஓங்கித் தரையில் அடித்தான்
ஓடினான்.. வேகமெடுத்து ஓடினான்...
புதனில் அழுந்தக் காலூன்றி ஒரே ஒரு தாவு....
துப்பாக்கி ரவைகளுக்கும், கையெறி குண்டுகளுக்கும் தப்பி

வெள்ளியின் நிலத்தில் விழுந்து உருண்டான்.

                 நன்றி; காலச்சுவடு - ஜுலை -2016


                                  

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...