Skip to main content

சுபம்




          
அவன் இங்கு வந்ததே
அந்த வெள்ளிக்கிழமைக்காகத் தான்.
அதன் முலையழுந்த அணைக்கத்தான்.
புதன் வரை  பொறுத்துவிட்டான்.
அதற்கு மேல் ஆகவில்லை.
இந்த வியாழன் ஓர் இடைஞ்சல்
ஒரு வாய்க்காலை தாண்டிக் குதிப்பதைப் போலே
அதை கடந்து விடத் துடித்தான்
தன்னை ஒருவன் தாண்டிப் போவதை பொறாது
 வியாழன் வாய் பிளந்து கத்தியது  .
வண்டி நிறைய ஆட்களை அனுப்பியது
காதலின் கனலி
சில மண்டைகளை உடைத்துப் போட்டான்
சில கால்களை முறித்துப் போட்டான்
சில தலைகளை திருப்பி வைத்தான்
கடைசியில் ஒரு தந்திரன்
புதனின் கழுத்தில் கத்தியை வைத்து பிடித்துக்கொண்டான்
காலம் ஸ்தம்பித்து நின்று விட்டது
வேறு வழியற்ற காதலன்
 “வெள்ளி வேண்டும்..” , “ வெள்ளி வேண்டும் “
என்றவன் காலில் விழுந்து கதறினான்
வெற்றி தந்த களிப்பில்
அவன் அண்ணாந்து சிரிக்க,
கண் பிழைத்த அக்கணத்தில்
அவன் கால்களை பற்றியிழுத்து
ஓங்கித் தரையில் அடித்தான்
ஓடினான்.. வேகமெடுத்து ஓடினான்...
புதனில் அழுந்தக் காலூன்றி ஒரே ஒரு தாவு....
துப்பாக்கி ரவைகளுக்கும், கையெறி குண்டுகளுக்கும் தப்பி

வெள்ளியின் நிலத்தில் விழுந்து உருண்டான்.

                 நன்றி; காலச்சுவடு - ஜுலை -2016


                                  

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...