Skip to main content

சுபம்




          
அவன் இங்கு வந்ததே
அந்த வெள்ளிக்கிழமைக்காகத் தான்.
அதன் முலையழுந்த அணைக்கத்தான்.
புதன் வரை  பொறுத்துவிட்டான்.
அதற்கு மேல் ஆகவில்லை.
இந்த வியாழன் ஓர் இடைஞ்சல்
ஒரு வாய்க்காலை தாண்டிக் குதிப்பதைப் போலே
அதை கடந்து விடத் துடித்தான்
தன்னை ஒருவன் தாண்டிப் போவதை பொறாது
 வியாழன் வாய் பிளந்து கத்தியது  .
வண்டி நிறைய ஆட்களை அனுப்பியது
காதலின் கனலி
சில மண்டைகளை உடைத்துப் போட்டான்
சில கால்களை முறித்துப் போட்டான்
சில தலைகளை திருப்பி வைத்தான்
கடைசியில் ஒரு தந்திரன்
புதனின் கழுத்தில் கத்தியை வைத்து பிடித்துக்கொண்டான்
காலம் ஸ்தம்பித்து நின்று விட்டது
வேறு வழியற்ற காதலன்
 “வெள்ளி வேண்டும்..” , “ வெள்ளி வேண்டும் “
என்றவன் காலில் விழுந்து கதறினான்
வெற்றி தந்த களிப்பில்
அவன் அண்ணாந்து சிரிக்க,
கண் பிழைத்த அக்கணத்தில்
அவன் கால்களை பற்றியிழுத்து
ஓங்கித் தரையில் அடித்தான்
ஓடினான்.. வேகமெடுத்து ஓடினான்...
புதனில் அழுந்தக் காலூன்றி ஒரே ஒரு தாவு....
துப்பாக்கி ரவைகளுக்கும், கையெறி குண்டுகளுக்கும் தப்பி

வெள்ளியின் நிலத்தில் விழுந்து உருண்டான்.

                 நன்றி; காலச்சுவடு - ஜுலை -2016


                                  

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...