Skip to main content

அழகு போர் அடிக்காதிருக்கட்டும் !


           




ஒரு தேசத்தில் 4 அழகிகளும்
நாற்பதாயிரம் இளைஞர்களும் வாழ்ந்து வந்தனர்.
அந்த நாற்பதாயிரம் இளைஞர்களும் காதலில் துடிதுடித்தபடி இருந்தனர்.
இளைஞர்கள் எனில் அத்தனை ஆண்களும் தான்
4 : 40,0000 என்கிற ஆகக் கொடூரமான வாய்ப்பாட்டால்
அங்கு பூசல்கள் மூண்டன.
கலவரங்கள் வெடித்தன.
முதுகில் குத்த காலஅவகாசம் போதவில்லை
ஆகவே நேருக்கு நேராக நெஞ்சில் குத்திக்கொண்டனர்.
வீதிகளில் பிணங்கள் கிடந்தன
வெறிநாய்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டன.
அரசனுக்கு துக்கம் மண்டையை அடைத்தது.
ரிஷியொருவன் தன் பத்தினியல்லாத ஒருத்தியுடன்
கலக்குங்காலையில் நம் தேசத்து அற்பனொருவன்
எட்டிப் பார்த்ததால் விளைந்த வினை..
முன்வரலாறு சொன்னார் குலகுரு.
உடனே
யாககுண்டத்தில் தீ வளர்த்து
கண்ணீர் வார்த்து
ரிஷியை வரவழைத்தனர்.
செக்கச்சிவந்த வீதிகளைக் கண்டதும்
அவருக்கு கண் கலங்கி விட்டது.
மனம் இரங்கி விட்டது.
32000 : 32000 என்று
அழகின் சமன்குலைவை நீக்கியருளினார்.
தேசத்தில் அமைதி திரும்பியது.
ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர்.
விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களையும்
பரிமாறிக் கொண்டனர்.
மாரிமூன்றும் பொய்க்காது பொழிந்தன.
நீதிநெறிகள் தழைத்தோங்கின.
கலைகள் செழித்து வளர்ந்தன.
அத்தேசத்தின் கொடியிலிருந்து
“தலையில்லாத முண்டம் அகற்றப்பட்டு
முத்தமிடப்படும் கன்னம் “ பொறிக்கப்பட்டது.
 பாருங்கள்...
 இப்போது அது பட்டொளி வீசிப் பறக்கிறது !


                                                                        நன்றி : மலைகள்.காம்

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...