Skip to main content

இன்றின் கேரட்


                  



இன்றைய நிலவரப்படி
கால்கிலோ கேரட்  7 ரூபாய்கு விற்கப்படுகிறது
நான் எப்படியும் தினமும்
குறைந்தது இருநூறு ரூபாய் சம்பாதித்து விடுவேன்
ஆக எப்படியும் எனக்கு கேரட் உண்டு
கேரட்டுக்கு  இந்த கேரட் நிறம் எப்படி வந்தது ?
மேலும், கேரட் எங்கு எப்படி விளைகிறது ?
அதன் மூலக்கூறுகள் யாவை ?
இந்த வெங்காயமெல்லாம் எனக்குத் தேவையில்லை
நமக்கு ஆயிரத்தெட்டு  சோலிகள் கிடக்கின்றன
ஓவராகச் சிந்திக்காதே ..
இரண்டு மிளகாயைக் சேர்த்துப் போட்டு..
தேங்காயை துருவிக் கொட்டினால்...
 அட... டடா...
விலைவாசி விண்ணைமுட்டி அதற்கு அப்புறமாய் பறந்தாலும்
நம் கேரட்டை நம்மிடமிருந்து யாராலும் பறித்து விட முடியாது
போதும் உன் கேரட் புராணம்...
நாளை இந்த ப்ளாஸ்டிக் டம்ளர்களை மாற்றி விட வேண்டும்
ஒரு மாசத்துக்கும் மேல் ஆகிறது..
ஆமாம்.. மாற்ற வேண்டும்... மாற்ற வேண்டும்
நீ உன் டம்ளரை எடுத்துக் கொள்...
ஓ.. நீ தான் இல்லை அல்லவா ?
சண்டையிட்டுப் பிரிந்து விட்டாய்..
சரி... பிரிந்தால் போய் விட  வேண்டுமா என்ன ?
அந்த நீலப்படத்தை போடு ...
வேண்டாம்....
த்தூ.... மொழுக்கட்டையென்று...
நேற்றே மோசமாக சலித்து விட்டது
விஜய் ஆண்டனியை கத்தவிட்டு விட்டு
கொஞ்சம் ஆட்டம் போடுவோமா இன்று ?
உனக்கு புத்தியே வரவில்லை இன்னும்...
“ இன்று” என்று முடிக்காதே...
“ இன்றில் “ என்று முடி...
 உடனே இது சிரீயஸ் கவிதை ஆவதைப் பார் !




Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.