Skip to main content

அன்புள்ள இசை

                                             
         



அன்புள்ள இசை,

      நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்கத்தின் சினத்திற்கு நீங்கள் ஆளாகாமல் தப்பிவிட்டீர் புலவரே!!).
   இது என்னுடைய முதல் வாசகர் கடிதம்.ஏனெனில் நான் வாசிப்பில் அதி சின்னப்பயல்.என் வாசிப்பிற்கு ஒரு வயதுதான் ஆகிறது.என்னதான் புரண்டு,கரணம் போட்டு வாசித்தாலும், இப்போதுதான் இலக்கியத்தின் outline என்னவென்றே புலப்பட்டிருக்கிறது.
    உங்களது கவிதைகள் என் சௌந்தர்ய இதழில் புன்னைகையை இழைய வைப்பவை என்றாலும் ,அதிர்வுறச் செய்த ஒரு சில கவிதைகளும் இருக்கின்றன.கெக்கலக்க போட்டுக்கொண்டு ஒவ்வொரு கவிதையாக வாசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது ‘இப்படி மழை வந்து விசுறுகிறது’ கவிதையில் சட்டென நின்று விட்டேன். என் புரிதலின் அடிப்படையில் சொல்வதென்றால், அதை நிராகரிப்பின் படிமங்கள் நிறைந்த கவிதையாய் பார்க்கிறேன்.பைத்தியம் என்பதை நான் விலக்கப்படவர்களின் குறியீடாகப் பார்க்கிறேன்.
      “பைத்தியத்திற்கு ஒரு வெட்டவெளி இருந்தது
      இப்படி மழை வந்து விசுறுகிறது”
என்ற வரிகள் அக்கவிதையின் உச்சம்.எனக்கு மிகப்பிடித்தமான கவிதை அது.'நீதிநெறி விளக்கம்’ கவிதையில் வரும் அதுபோன்ற சாவிக்காரர்கள் நான் பலமுறை  சந்தைகளில் கண்டவர்கள் தான்.ஆனால் அவர்கள் இசையால் தான் கவிதையாகியுள்ளார்கள். ‘வல்லான் வகுத்தது’ சுய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காத இன்றைய பல்துறை நிறுவனங்கள் மீதான இடித்துரைத்தல்.
   இப்படியும் கவிதை எழுதமுடியுமா என்று வியக்கவைத்தவை-‘நம்பு’,‘வாழ்விலோர் ஆனந்தம்’ போன்ற கவிதைகள்.வெறும் பகடிகள் மட்டுமே உங்கள் கவிதை இல்லை என்று சொல்வேன்..சமகால வழ்வின் போலிகள் மீதான விமர்சனங்கள் மற்றும் ,தார்மீகக் கோபங்கள், (நத்திங் ஸ்பெஷல்?,குடலுறுவி,வீடு,வெள்ளைக்கலர்,ரவா ரோஸ்ட்) சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகள், மகிழ்ச்சிகள்,ஏக்கங்கள் என்று பல்முனைகள் கொண்டவை அவை.உங்களுக்கேயான தனித்துவத்தின் அடையாளங்களாக ஆட்டுதி அமுதே,காவியம்,கார் சிறப்பு,இன்னிரவு,சாதாமாங்காய்,அவரும் நானும்,ஆட்ட நாயகன், போன்றவற்றைச் சொல்லலாம்(சில கவிதைகள் விடுபட்டிருக்கலாம்)
    செவ்விலங்கியங்களின் சொற்கள்,பெயர்கள் கொண்ட கவிதைகளில் தற்காலத்தைப் பிணைத்திருப்பது புதிய அனுபவம் தருபவை.(நாட்டு வளம் உரைத்தல்,தலைவி அரற்று)

“சுபம்” கவிதை உங்களது உறுமீன்களற்ற நதி தொகுப்பில் வரும் ‘ப்ளம் கேக்’ கவிதையை நினைவு படுத்துகிறது.அதில் ப்ளம் கேக் சாப்பிடுவதற்காக நாட்களின் மேல் துடுப்பிட்டு துடுப்பிட்டுச் செல்லுதல்.இதில் நாட்களை தாண்டிக் குதித்து,சண்டையிட்டு,கெஞ்சி சினிமாவின் ஸ்டைலில் அவற்றைக் கடந்து, விரும்பிய ஒரு நாளை அடைவது.நல்லதொரு சித்தரிப்பு இக்கவிதை.அதேபோல ‘சுமாரான கொள்கைக்குன்று’ கவிதை, ‘Mr.சஷ்டிக்கவசம்’ கவிதையை நினைவூட்டுகிறது.‘சாய்ஸ்’, ‘ஏகாந்தவாசம்’-போன்ற கவிதைகள் சுயபகடியின் சிருஷ்டிகள். ‘சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பீடித்துக்கொண்ட’போது தனசேகருக்கும் மகிழ்ச்சி பீடித்துக்கொண்டது.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.சளி மூக்கில் வழிந்தபோதும் உற்சாகம் கொண்டார்.
     இத்தொகுப்பிலுள்ள பாதிக் கவிதைகளை உங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவெ படித்திருக்கிறேன்.இருப்பினும் புத்தகமாகப் படிக்கும்போது ஒரு தனி இன்பம் உள்ளது.இத்தொகுப்பை வாசிக்கக் கொடுத்த அண்ணன் திருமூர்த்தி என் நன்றிக்குரியவர்.போன வாரம் என் அலைபேசியின் தொடர்பு எண்கள் யாவும் அழிந்துபோனபோது உங்கள் எண்ணும் சுவாஹா ஆகிவிட்டது.அதையும் அவர்தான் தந்தார்.எண் இருந்தபோதிலும் ஒரு முறைதான்(ஆறு மாதங்களுக்கு முன்பு) உங்களிடம் பேசியுள்ளேன்.ஒரு முறை சந்தித்திருக்கிறோம்(ஆத்மாநாம் விருது விழா 2016).

                                                                             அன்புடன்
                                                                             தனசேகர்
                                                                 

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...