Skip to main content

அன்புள்ள இசை

                                             
         



அன்புள்ள இசை,

      நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்கத்தின் சினத்திற்கு நீங்கள் ஆளாகாமல் தப்பிவிட்டீர் புலவரே!!).
   இது என்னுடைய முதல் வாசகர் கடிதம்.ஏனெனில் நான் வாசிப்பில் அதி சின்னப்பயல்.என் வாசிப்பிற்கு ஒரு வயதுதான் ஆகிறது.என்னதான் புரண்டு,கரணம் போட்டு வாசித்தாலும், இப்போதுதான் இலக்கியத்தின் outline என்னவென்றே புலப்பட்டிருக்கிறது.
    உங்களது கவிதைகள் என் சௌந்தர்ய இதழில் புன்னைகையை இழைய வைப்பவை என்றாலும் ,அதிர்வுறச் செய்த ஒரு சில கவிதைகளும் இருக்கின்றன.கெக்கலக்க போட்டுக்கொண்டு ஒவ்வொரு கவிதையாக வாசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது ‘இப்படி மழை வந்து விசுறுகிறது’ கவிதையில் சட்டென நின்று விட்டேன். என் புரிதலின் அடிப்படையில் சொல்வதென்றால், அதை நிராகரிப்பின் படிமங்கள் நிறைந்த கவிதையாய் பார்க்கிறேன்.பைத்தியம் என்பதை நான் விலக்கப்படவர்களின் குறியீடாகப் பார்க்கிறேன்.
      “பைத்தியத்திற்கு ஒரு வெட்டவெளி இருந்தது
      இப்படி மழை வந்து விசுறுகிறது”
என்ற வரிகள் அக்கவிதையின் உச்சம்.எனக்கு மிகப்பிடித்தமான கவிதை அது.'நீதிநெறி விளக்கம்’ கவிதையில் வரும் அதுபோன்ற சாவிக்காரர்கள் நான் பலமுறை  சந்தைகளில் கண்டவர்கள் தான்.ஆனால் அவர்கள் இசையால் தான் கவிதையாகியுள்ளார்கள். ‘வல்லான் வகுத்தது’ சுய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காத இன்றைய பல்துறை நிறுவனங்கள் மீதான இடித்துரைத்தல்.
   இப்படியும் கவிதை எழுதமுடியுமா என்று வியக்கவைத்தவை-‘நம்பு’,‘வாழ்விலோர் ஆனந்தம்’ போன்ற கவிதைகள்.வெறும் பகடிகள் மட்டுமே உங்கள் கவிதை இல்லை என்று சொல்வேன்..சமகால வழ்வின் போலிகள் மீதான விமர்சனங்கள் மற்றும் ,தார்மீகக் கோபங்கள், (நத்திங் ஸ்பெஷல்?,குடலுறுவி,வீடு,வெள்ளைக்கலர்,ரவா ரோஸ்ட்) சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகள், மகிழ்ச்சிகள்,ஏக்கங்கள் என்று பல்முனைகள் கொண்டவை அவை.உங்களுக்கேயான தனித்துவத்தின் அடையாளங்களாக ஆட்டுதி அமுதே,காவியம்,கார் சிறப்பு,இன்னிரவு,சாதாமாங்காய்,அவரும் நானும்,ஆட்ட நாயகன், போன்றவற்றைச் சொல்லலாம்(சில கவிதைகள் விடுபட்டிருக்கலாம்)
    செவ்விலங்கியங்களின் சொற்கள்,பெயர்கள் கொண்ட கவிதைகளில் தற்காலத்தைப் பிணைத்திருப்பது புதிய அனுபவம் தருபவை.(நாட்டு வளம் உரைத்தல்,தலைவி அரற்று)

“சுபம்” கவிதை உங்களது உறுமீன்களற்ற நதி தொகுப்பில் வரும் ‘ப்ளம் கேக்’ கவிதையை நினைவு படுத்துகிறது.அதில் ப்ளம் கேக் சாப்பிடுவதற்காக நாட்களின் மேல் துடுப்பிட்டு துடுப்பிட்டுச் செல்லுதல்.இதில் நாட்களை தாண்டிக் குதித்து,சண்டையிட்டு,கெஞ்சி சினிமாவின் ஸ்டைலில் அவற்றைக் கடந்து, விரும்பிய ஒரு நாளை அடைவது.நல்லதொரு சித்தரிப்பு இக்கவிதை.அதேபோல ‘சுமாரான கொள்கைக்குன்று’ கவிதை, ‘Mr.சஷ்டிக்கவசம்’ கவிதையை நினைவூட்டுகிறது.‘சாய்ஸ்’, ‘ஏகாந்தவாசம்’-போன்ற கவிதைகள் சுயபகடியின் சிருஷ்டிகள். ‘சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பீடித்துக்கொண்ட’போது தனசேகருக்கும் மகிழ்ச்சி பீடித்துக்கொண்டது.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.சளி மூக்கில் வழிந்தபோதும் உற்சாகம் கொண்டார்.
     இத்தொகுப்பிலுள்ள பாதிக் கவிதைகளை உங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவெ படித்திருக்கிறேன்.இருப்பினும் புத்தகமாகப் படிக்கும்போது ஒரு தனி இன்பம் உள்ளது.இத்தொகுப்பை வாசிக்கக் கொடுத்த அண்ணன் திருமூர்த்தி என் நன்றிக்குரியவர்.போன வாரம் என் அலைபேசியின் தொடர்பு எண்கள் யாவும் அழிந்துபோனபோது உங்கள் எண்ணும் சுவாஹா ஆகிவிட்டது.அதையும் அவர்தான் தந்தார்.எண் இருந்தபோதிலும் ஒரு முறைதான்(ஆறு மாதங்களுக்கு முன்பு) உங்களிடம் பேசியுள்ளேன்.ஒரு முறை சந்தித்திருக்கிறோம்(ஆத்மாநாம் விருது விழா 2016).

                                                                             அன்புடன்
                                                                             தனசேகர்
                                                                 

Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...