உன் கற்பனைக்கு
அத்தனை சிறகுகள்
எங்கிருந்தென்று தெரியாமல்
சீறி வருகிறதோர் அம்பு
நீ துடிதுடித்து
தாழ்வெண்ணத்தில் விழுகிறாய்
பறத்தலின் குதூகலத்திலிருந்து
இருத்தலின் நிம்மதிக்குத் திரும்புகிறாய்
தாழ்வெண்ணத்தில் விழுவது என்பது
கிராமத்திற்குத் திரும்புவது..
அதனுள்ளே ஒரு ஒற்றையடிப்பாதைக்கு..
அதுவழியே ஒரு காட்டுக் கோயிலுக்கு..
அதன் மட்ட மதியத்திற்கு..
அந்த வேலி ஓணானுக்கு
பரவசமும் பதட்டமும் அருகருகே இருப்பது
இரண்டிற்கும் அப்பால்
வெகு தொலைவில் இருக்கிறது
ஒரு சின்னஞ்சிறு குடிசை.
அதில் சமையல் ஆகிறது
மண் சட்டியில்.
உலை கொதிக்கும் வரைக்கும்
பக்கத்து வேம்பின் நிழலில்
மல்லாந்து படுத்திருக்கிறது
உன் தாழ்வெண்ணம்.
அதன் ஏகாந்தம் தனி.
Comments