தெருவில் குந்தியிருக்கும் அவருக்கும் தெருவில் படுத்துறங்கும் நாய்களுக்கும் எப்படியோ சிநேகம் உருவாகிவிட்டது. காவல்பணி முடித்து அதிகாலையில் வீடு திரும்புகையில் நான்கு ஜீவன்களை அழைத்துக் கொண்டு பேக்கரிக்கு ஊர்வலம் போவார். ஒரு கட்டு பிஸ்கட்டை உடைத்து மழையைத் தூவுவது போல் தூவிவிடுவார். அவருக்கும் நாய்களுக்கும் இடையே இருந்த பிஸ்கட் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நாளடைவில் வேறொன்று பூத்துவிட்டது. இப்போதெல்லாம் மாதக் கடைசிகளில் அவர் தூவுவது போல் தூவுகிறார். அவை உண்பது போல் உண்கின்றன. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments