பனிபூத்த இந்த மார்கழிப் பொழுதில் வீட்டின் முன் கோலம் கொண்டிருக்கிறாள். அமர்ந்த கோலமோ குனிந்த கோலமோ அன்று இது தனிக்கோலம். ஒன்றில் ஆழ்ந்து கரைகையில் கொள்ளும் திருக்கோலம். ஈரக் கூந்தலினின்று சொட்டுச் சொட்டாய் நழுவிவிழும் நீர்த் துளிகள் அழிப்பதற்குப் பதிலே ஆக்கி ஆக்கி அளிக்கின்றன. உலகை ஆசிர்வதித்தபடி கொஞ்சமாய் உந்தி வளையும் குதிகால்பிறை சிருஷ்டியின் பூரிப்பு அவள் தன்னுள்ளே சிதறிக் கிடக்கும் புள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு கோடிழுக்கிறாள் வாசலில் உதிக்கிறது புத்தம்புது கோலமொன்று. |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments