அன்று முழுக்க கடும் மனச்சோர்வில் இருந்தேன். கட்டிலை விட்டு எழக்கூட விரும்பாத மனச்சோர்வு. வாழ்வு அப்படி அடித்து மூலையில் கிடத்துவது அவ்வப்பொழுது நடப்பதுதான். அடுத்த நாள் அதையும் இதையும் பற்றி கொண்டு மெல்ல எழுந்து நின்றேன். கட்டாயம் போயாக வேண்டிய உறவினரின் சுபகாரியம் ஒன்று இருந்தது. முதல் நாளுக்கும் அடுத்த நாளிற்கும் வாழ்வில் எதுவுமே மாறியிருக்கவில்லை ஆனால் திடீரென எங்கிருந்தோ ஒரு பாட்டு வந்து நாவில் அமர்ந்தது. ...
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட.."
அந்த அழுகிய நான் எங்கு ஓடி ஒளிந்ததோ தெரியவில்லை. பாட்டில் ஏறிப் பறந்து கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு மொட்டை உருவம் என் தோள் தொட்டுத் திருப்பி " நேற்று நீ எப்படி இருந்தாய்... நினைவிருக்கிறதா..?" என்று சிரித்துக் கொண்டே கேட்பது போல ஒரு பிரமை தோன்றி மறைந்தது. நடு ரோட்டில் கண்ணீர் தாரைகள் வழிந்து இறங்கி மழை நீரில் விழுந்தன். அவசர அவசரமாக ஹெல்மெட் கண்ணாடியை இறக்கிவிட்டேன். மறுபடியும் அந்தப் பாடலை பாட முயன்றேன். வெறும் அழகையாக ஒலித்தது. களிப்பின் கண்ணீர்!
சிங்காநல்லூர் சிக்னலை பழமுதிர்சோலை ஆக்க உன்னைத் தவிர வேறு ஒரு தேவனாலும் ஆகாது அய்யனே!
Comments