Skip to main content

பழமுதிர்சோலையார்


அன்று முழுக்க கடும் மனச்சோர்வில் இருந்தேன். கட்டிலை விட்டு எழக்கூட விரும்பாத  மனச்சோர்வு. வாழ்வு அப்படி அடித்து மூலையில் கிடத்துவது அவ்வப்பொழுது நடப்பதுதான். அடுத்த நாள் அதையும் இதையும் பற்றி கொண்டு மெல்ல எழுந்து நின்றேன். கட்டாயம் போயாக வேண்டிய உறவினரின் சுபகாரியம் ஒன்று இருந்தது. முதல் நாளுக்கும் அடுத்த நாளிற்கும் வாழ்வில் எதுவுமே மாறியிருக்கவில்லை  ஆனால் திடீரென எங்கிருந்தோ ஒரு பாட்டு வந்து நாவில் அமர்ந்தது. ...

"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு  மகிழ்ச்சியில் திளைத்திட.." 

அந்த அழுகிய நான் எங்கு ஓடி ஒளிந்ததோ   தெரியவில்லை.  பாட்டில் ஏறிப்  பறந்து கொண்டிருந்தேன். 

திடீரென ஒரு மொட்டை உருவம் என் தோள் தொட்டுத் திருப்பி  " நேற்று நீ எப்படி இருந்தாய்... நினைவிருக்கிறதா..?"  என்று சிரித்துக் கொண்டே  கேட்பது போல ஒரு பிரமை  தோன்றி மறைந்தது.  நடு ரோட்டில் கண்ணீர் தாரைகள் வழிந்து இறங்கி மழை நீரில் விழுந்தன். அவசர அவசரமாக ஹெல்மெட் கண்ணாடியை இறக்கிவிட்டேன். மறுபடியும் அந்தப் பாடலை பாட முயன்றேன். வெறும் அழகையாக ஒலித்தது. களிப்பின் கண்ணீர்! 

சிங்காநல்லூர் சிக்னலை பழமுதிர்சோலை ஆக்க உன்னைத் தவிர வேறு ஒரு தேவனாலும் ஆகாது அய்யனே!

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

பேய் பங்களா

வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை  வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில்  ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!