Skip to main content

வதனப் புத்தகம்

 



ன் வாழ்கிறோம்

என்றே தெரியாமல்

வாழ்ந்து வரும்

கோடிக்கணக்கான மனிதர்களைப் போலே

இந்த  ப்ளூ லைக் 

இங்கே வாழ்ந்து வருகிறது.


கனவான்கள் கொஞ்ச நாட்கள் 

கைக்கொண்டுவிட்டு

கனவானாகவே நீடிக்க முடியாத ஆத்திரத்தில்

அவர்களும் அதை கைவிட்டு விட்டார்கள்.


அதை யாரும் காண விரும்புவதில்லை


அதனோடு இரண்டு வார்த்தை பேச நாதியில்லை.


கல்யாணங் காச்சிக்கு அழைப்பதில்லை.


நீலத்தில் ராசிக்கல் வைத்து 

மோதிரம் அணியும் மாந்தர்க்குக்  கூட

அது நல்ல சகுனமில்லை.


உலகின் முன்னணி மூளைகள்

இணைந்து உருவாக்கிய ஒன்றை

"உயிரற்ற சடம்"  என்று

நேற்றொருவள்  ஏசக் கேட்டேன்.


எல்லோரும்

சிவந்த இதயத்தால் அன்பு செய்து கொள்கிறார்கள்.


சிவந்த இதயத்தால் 

"காலை வணக்கம் "சொல்லி

அதனாலேயே  "இரவு வணக்க"மும்

சொல்கிறார்கள்


இரத்த வேட்கை அலையடிக்கும் சிவப்பால்

இறுக அணைத்து  முத்தமிட்டுக் கொள்கிறார்கள்


இரண்டு சிவந்த இதயங்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் சில

ருதுவாகி அமர்ந்திருக்கின்றன 

இப்போது.


'ஆலோலம் பாடி' யில் வரும்

அநாதைச் சிறுவனின் முகத்தோடு

இந்த ப்ளூ லைக்

இங்கு 

என்னதான் செய்து கொண்டிருக்கிறது?


ஆதரவாய்க் கைபற்றி  அதை

இந்த ஊருக்கு வெளியே விடப் போகையில்

துளிர்த்த கண்ணீரில் நமட்டுச் சிரிப்பு கலந்து

அது என்னிடம் சொன்னதை

நான் உங்களிடம் 

சொல்லிவிடவே கூடாது என்று எண்ணியிருந்தேன்


ஆயினும்

உண்மை என்றேனும் ஒரு நாள்

வெளிச்சத்திற்கு வரத்தானே வேண்டும்?


"அந்த சிவந்த இதயமும் நான்தான் என்பதை அறிய நேரும் போது 

நீங்கள் என்ன ஆவீர்கள்?"




Comments

This comment has been removed by the author.

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...