நான் பலஹீனமான கவிதைகளை எழுத ஆசைப்படுகிறேன். அகராதிப் பூச்சிகள் அப்படியே ஆழ்ந்து ஊரும் படிக்கு அடுக்குமாடிக் கட்டிடங்களை கட்டி எழுப்புவது போல் ராட்சத இயந்திரங்கள் உறுமிக் கதறாதபடிக்கு உள்ளதிலேயே வலுவான சொல்லின் தலையில் ஆணியடித்து என் கவிதையைத் தொங்க விடாதபடிக்கு ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் புரட்டி அதனடியில் ஒருவர் எதையெதையோ தேடும் படிக்கு தொட்டால் சரிந்துவிடும்படிக்கு "எங்கு தொடுவேன்... " என்று என் வாசகர் ஆனந்தத்தில் திகைக்கும்படிக்கு. |
Comments