அவசரத்தில் இருக்கும் இளம் பெண் ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே மாகாளியம்மனின் வாசலில் காலூன்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு அவசரமுமின்றி ஆடி அசைந்து வெளிவரும் ஒரு மூதாட்டி தன் கைக்குழியை ஒற்றி எடுத்து பூசி விடுகிறாள் அவளுக்கு. பிசிறை கண் மறைத்து ஊதியும் விட்டாள் அந்த ஊதலில் வந்த இசை தூரத்தில் இருந்த ஒருவனுக்குத் தெளிவாகக் கேட்டது. யாரோ யாருக்கோ தீற்றி விடும் திருநீரில் யாரோ ஒருவனின் ஏதோ ஒன்று குணமடைகிறது தன் கை ஒன்றுமில்லாத இந்தக் காரியத்தைக் காணும் தேவியின் வதனத்தில் ஒரு பூரித்த புன்னகை. |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments