அவசரத்தில் இருக்கும் இளம் பெண் ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே மாகாளியம்மனின் வாசலில் காலூன்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு அவசரமுமின்றி ஆடி அசைந்து வெளிவரும் ஒரு மூதாட்டி தன் கைக்குழியை ஒற்றி எடுத்து பூசி விடுகிறாள் அவளுக்கு. பிசிறை கண் மறைத்து ஊதியும் விட்டாள் அந்த ஊதலில் வந்த இசை தூரத்தில் இருந்த ஒருவனுக்குத் தெளிவாகக் கேட்டது. யாரோ யாருக்கோ தீற்றி விடும் திருநீரில் யாரோ ஒருவனின் ஏதோ ஒன்று குணமடைகிறது தன் கை ஒன்றுமில்லாத இந்தக் காரியத்தைக் காணும் தேவியின் வதனத்தில் ஒரு பூரித்த புன்னகை. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments