வீணாகி வழியும் தெருக்குழாய் நீரை பொறுப்பேற்று அடைப்பதற்காக... பள்ளி வாகனத்திலிருந்து கையசைக்கும் சின்னஞ் சிறு கரங்கள் ஏமாந்து போகாதிருப்பதற்காக... மலர்கள் சொல்லும் காலை வணக்கத்தை செவி மடுத்துப் புன்னகைப்பதற்காக... நீண்ட க்யூவில் கட்டக் கடைசி ஆளாய் சாந்தமாக நிற்பதற்காக... துப்புரவு வண்டியின் மணியோசையிலிருந்து ஒரு புதிய பாடலைத் துவக்குவதற்காக... ஒவ்வொரு மகளையும் என் மகள் பெயர் சொல்லி அழைப்பதற்காக... நறுமணத் தைலத்தால் என்னை அலங்கரிக்கும் பகட்டிலிருந்து விடுபட்டு நானே ஒரு நறுமணப் புட்டியாகி மணமூட்டுவதற்காகத்தான் அன்பே! நான் உன்னை என் காதலி என்று கற்பனை செய்து கொள்கிறேன். நான் உன்னை என் காதலி என்று கற்பனை செய்து கொள்ளும் காலங்களில் அன்பே! இந்த பூமியின் இதயத்துள் கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்கும் திட்டத்திற்கு சற்றே ஓய்வளிக்கிறேன். |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments