Skip to main content

கண் - கடைக்கண்



டவுள் மனிதனுக்கு 

முதலில் கண்களைப் படைத்தான் 

பிறக்கப் பிறக்கவே

அகலத் திறந்து கொண்டன கண்கள்.

மனிதன் மகிழ்ச்சியில் கூவினான்.

நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான்.

"கடவுளே!

நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியே

எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!"

கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டு

பிறகு படைத்தான்

கடைக்கண்ணை.


*


விஷயம் 

மிக மிக எளிது

ஒரு மனிதன் 

இன்னொரு மனிதனை

ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்து விட்டால் போதும்.


   

*


தம்பி!

இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்!

மேலும்

இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி

எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு!

பார்த்துப் பார்த்து பழசாக்கு!

பார்த்துப் பார்த்துப் பாழாக்கு!


*


காதலுக்குக் கண் இல்லை. 

ஆனால்

கடைக்கண் உண்டு.

காதலர் கடைக்கண்ணிலிருந்து

கண்களுக்குத் திரும்புவதுதான்

"காதலின் ஆவியாதல்" 

என்றழைக்கப்படுகிறது


*


கனக சுப்பு ரத்தினா!

காணாமல்

கண்டு கண்டு

கடுகை மலையாக்குவதில்

சமர்த்தன் உன் குமரன்.

அவனை நம்பி

நீ

"மாமலையைக்  கடுகாக்குவேன்" என்று

சைக்கிள்  செயினைச் சுற்றாதே!


 *


கூற்றம்  ! 

கூற்றம் ! 

கூற்றம் !

என்று அலறிக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


கூற்றம் ! 

கூற்றம்!

கூற்றம்! 

என்ற படி

பார்த்துக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


பார்வையைத் திருப்பிக் கொண்டால்

பாட்டிற்கு எங்கு போவான் பாவம்?


 *


"கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்; கண்ணே சகல நோய்க்கும் காரணம்" 

என்கிற தட்டையான வரியை 

கவிதை என்றான் சுகுமாரன்.

நான் இரண்டு கண்களாலும் வாசித்து

அவ்வரியை 

கவிதைப் புத்தகத்திலிருந்து வெட்டியெடுத்து

கண் மருத்துவமனையின்

"cash counter" க்குப் பக்கத்தில்  ஒட்டினேன். 

பிறகு 

ஓரக்கண்ணால் வாசித்துவிட்டு

ஆயிரம் கண் வைத்து அழுதேன்.


 *


"நீ விரும்பியது உன் உடல் முழுதும் ஆகுக!"

என்பதோடு கதை முடிந்து விட்டதா என்ன?

அதன் பின்

இந்திரன் அழுதான் என்பதற்கு 

ஆதாரம் உண்டா ஏதும்?


 *


குருடன் ஒருவன்

தடவித் தவறி

தவறித் தடவி

கைப்பற்றிவிட்டான் தடமுலையை.

விறைத்து நீண்ட காம்பை

நுனி நாவால் தீண்டுகையில்

அவன் குருடு நீங்கி ஒளி மின்னியது.

இதோ....

கண்ணுடைக் காதலன் எவனாலும்

காண முடியாக் காட்சி ஒன்று!


*


மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல


*


நெற்றிக்குள் உள்ளொடுங்கி

இமைகளைப் போர்த்திக் கொண்டு

நடுங்கும் நாய்க்குட்டிகள் போல்

என்ன ஒரு நடிப்பு!

என்ன ஒரு நடிப்பு?


*


“முதலில் 

மெதுவாகக் கண்களை மூடுங்கள்!”

என்றார் குரு

ஒவ்வொரு கண்ணாய் 

மூடி முடிப்பதற்குள்

மணி ஒலித்து விட்டது


       

நன்றி; காலச்சுவடு நவம்பர்- இதழ்


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...