நடுச்சாமத்தில் கொஞ்சம் துணிகளோடு வீட்டை விட்டு வெளியேறிய அன்று மேலே வானம் இருந்தது ஊசிக் கப்பலும் புறாக்களின் குட்டிகரணமும் பார்த்த அந்த வானம் அன்று அது வேறு வேடிக்கைகள் விடைபெற்ற பிறகு முதன் முதலாக எப்போது அண்ணாந்து பார்த்தேன் என்பது நினைவில்லை ஆனால் அப்போது அழுது கொண்டிருந்தேன் அது நினைவில் இருக்கிறது. சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு உயிரை சட்டெனச் சரித்து விட்டு எழுந்து போகிறது இன்னொரு உயிர் கீழே விழுவது வானத்தில் விழுகிறது 'புற்று ' உறுதியாகிவிட்ட நாளில் மருத்துவமனையிலிருந்து ஏன் வானிற்கு நடந்து போகிறாள் ஒருத்தி? அந்தி என்பது வண்ணக் கலவைகளின் கும்மாளம் என்று நம்பும் ஒருவன் தன்னை ஓவியன் என்றும் நம்பிக் கொள்கிறான் அம்மாவை எரித்துவிட்டு வந்த நாளில் தெரிந்ததொரு வானம் வானம் என்றால் என்னவென்று சொல்லும் ஒரு வானம் |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments