இன்று உன் வீதி வழியே நான் வந்து கொண்டிருப்பது உன்னைக் காண்பதற்கல்ல அந்தப் பச்சைப் பொட்டைப் பார்ப்பதற்காக குழலிலிருந்து விழுந்த அருவியைக் காண்பதற்காக வாடி உதிர்ந்து விட்ட மல்லிப்பூவை வாடா மல்லியாக்கி செடிகளில் சூட்டுவதற்காக முடி கொட்டி, அழுக்கூறிய சொறி நாய்க் குட்டியை செல்லம் கொஞ்சுவதற்காக தொடவே இல்லையே என்பது போல் தொட்டுக் கொண்ட ஒரு கணத்தை இன்னொரு முறை தொட்டுப் பார்ப்பதற்காக உடுத்தாமல் அள்ளிப் போர்த்திய சேலையிலிருந்து கேட்குமே ஒரு கேலிச் சிரிப்பு அதைத் திரும்பவும் ஒரு முறை கேட்பதற்காக "உனக்கொன்றும் குறை இல்லையே?" என்று "அதிர்ஷ்ட விநாயக"ரை நலம் விசாரிப்பதற்காக எல்லா வாகனங்களுக்கும் வழி விட்டு வழி விட்டு காரை கட்டை வண்டி ஆக்குவதற்காக "எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்க" என்பது போல் ஒவ்வொரு பாதசாரியையும் ஆசிர்வதிப்பதற்காக இத்தனைக்கும் குறுக்கே தயவு செய்து நீ வந்து விடாதே |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments