முதல் முறை பார்த்த போது ஊரும், பேரும் விசாரித்தேன் என்பது தவிர உறவேதுமில்லை இப்போது ஊர் மட்டும் நினைவிருக்கிறது இடையில் சில மாதங்கள் காணாமல் போய்விட்ட அந்த வளரிளம் சிறுவன் இன்று மீண்டும் தென்படுகிறான் கருத்த வதனத்தின் நெற்றிப் பொட்டில் சந்தனத்தின் பொன் ஊஞ்சல் அன்று போலவே ஆடிக் கொண்டிருக்கிறது என்னை தூரத்தில் கண்டதும் முகம் முழுக்க அரும்பி நெளிந்து குழைந்து நெருங்கி வந்து "சாப்பிட்டீங்களாண்ணே...?" என்றான். நேரம் அப்போது முற்பகல் 11: 30 ஆகவே அது காலை உணவைக் குறிக்காது மதிய உணவைக் குறிக்காது உணவையே குறிக்காது |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments