இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் மண்ணூன்றி நின்றாலும் தூசிகளால் அண்ட முடியாத அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் மேன்மைகளின் ஓயாத நச்சரிப்புகளிலிருந்து மேன்மக்களை மீட்க வல்ல அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். சாம்ராட்களின் அவர்தம் குதிரைகளின் மூச்சிளைப்புகளைக் குணமூட்ட வந்த அதுதான் விஞ்ஞானிகளை எலிக் கூண்டிலிருந்து இழுத்து வந்தது ஞானியரின் எல்லா யோகங்களையும் சுருங்கச் சுருக்கி ஒன்றே ஒன்றாய் ஆக்கி அருளிய அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் மாட்டிற்குப் பதிலாய் வண்டியிழுக்கும் ஒருவனை வானத்தை நோக்கி விசிலூத வைத்தது எதுவோ அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் அது "வருகிறாயா?" என்றது எங்கே என்று நான் எப்படிக் கேட்பேன்? |
Comments