Skip to main content

விசில் ஒலிக்கும் சமோசா



பொறிஞர் ஆனந்துக்கு
இன்றைய தேநீர் இடைவேளையின் போது
ஒரு சமோசா சாப்பிடவேண்டும் என்று தோன்றியது.
தாளித்த வெங்காயத்தின்
பொரித்த வாடைக்கு நாசி கிரங்கியது.
கண்களை மூடி ஒரு முறை முகர்ந்ததில்
அவர் தன் 22 வருடங்களை
உள்ளிளுத்துக் கொண்டார்.
முக்கோண வடிவ சமோசா
நீள் சதுர வெண் திரையானது.
பொறிஞர், இப்போது
லட்சுமி டாக்கீஸின் மணல் குட்டின் மேல்
அமர்ந்திருக்கும் சிறு பொடியன்.
தங்க மீனை எடுப்பதற்காக
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன்.
நினைத்ததை முடித்தாக வேண்டும் தலைவர்.
மூதாட்டிகள் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள்.
ஊஞ்சலைப் போல ஆடிக்கொண்டிருக்கிறது கயிறு.
சற்றைக் கெல்லாம்
சடசடவென எழுந்த கரவொலிகளுக்கிடையே
அரங்கைக் கிழிக்கிறது
ஆனந்தின் விசில் சத்தம்.

Comments

paalya ninaivugal eppothume nenjai negila vaippavai..:-))) (sorry for typing in english)
நிகழிலிருந்து தாவித் திரும்புதல் அற்புதமல்லவா? நீங்களுந்தான் அன்றைக்குத் தாவியிருந்தீர்கள்... என்ன சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது:)
எத்தகைய எளிய சொற்களில் அற்புதங்கள் செய்கிறீர்கள் சத்ய மூர்த்தி
இந்தக் கவிதையும் அழகு
வழக்கம் போலத்தான் .......சூப்பர்.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...