Skip to main content

விசில் ஒலிக்கும் சமோசா



பொறிஞர் ஆனந்துக்கு
இன்றைய தேநீர் இடைவேளையின் போது
ஒரு சமோசா சாப்பிடவேண்டும் என்று தோன்றியது.
தாளித்த வெங்காயத்தின்
பொரித்த வாடைக்கு நாசி கிரங்கியது.
கண்களை மூடி ஒரு முறை முகர்ந்ததில்
அவர் தன் 22 வருடங்களை
உள்ளிளுத்துக் கொண்டார்.
முக்கோண வடிவ சமோசா
நீள் சதுர வெண் திரையானது.
பொறிஞர், இப்போது
லட்சுமி டாக்கீஸின் மணல் குட்டின் மேல்
அமர்ந்திருக்கும் சிறு பொடியன்.
தங்க மீனை எடுப்பதற்காக
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன்.
நினைத்ததை முடித்தாக வேண்டும் தலைவர்.
மூதாட்டிகள் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள்.
ஊஞ்சலைப் போல ஆடிக்கொண்டிருக்கிறது கயிறு.
சற்றைக் கெல்லாம்
சடசடவென எழுந்த கரவொலிகளுக்கிடையே
அரங்கைக் கிழிக்கிறது
ஆனந்தின் விசில் சத்தம்.

Comments

paalya ninaivugal eppothume nenjai negila vaippavai..:-))) (sorry for typing in english)
நிகழிலிருந்து தாவித் திரும்புதல் அற்புதமல்லவா? நீங்களுந்தான் அன்றைக்குத் தாவியிருந்தீர்கள்... என்ன சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது:)
எத்தகைய எளிய சொற்களில் அற்புதங்கள் செய்கிறீர்கள் சத்ய மூர்த்தி
இந்தக் கவிதையும் அழகு
வழக்கம் போலத்தான் .......சூப்பர்.

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...