Skip to main content

கிறுக்கு


  




மார்கழிப்பனியில்
காதடைத்த பஞ்சோடு
அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம்
மைதானங்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஃபிட்னஸ் கிறுக்கு பிடித்திருக்கிறது

அதே சிற்றஞ் சிறுகாலையில்
மதுவிடுதியின் கதவுகளை ஓங்கி ஓங்கி தட்டுகிறான் ஒருவன்
அவனைத் தான் நாம் குடிக்கிறுக்கென்கிறோம்

உருளைக்கிழங்கு போண்டாவை மணமுடித்து
அதனூடே 72 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்ததொரு கிறுக்கு

 சிங்கத்தின் வாயில் தலையைத் தந்துவிட்டு
 கர்த்தரை நோக்கி கூவுகிறதொரு கிறுக்கு

 பெண்கிறுக்கில் பலநூறு உட்கிறுக்குகள்
சாரதி வைத்து தேரோட்டிய அதே தெருவில்
இன்று நெஞ்சைப்பிடித்த படி பஸ்ஸிற்கு ஓடுகிறார்
கல்யாணசுந்தரம்
அவருக்கு கார்குழல் துவங்கி கால்நகம் முடியவும் கிறுக்கான கிறுக்கு

இசைக்கிறுக்கில்
வகைக்கொரு கிறுக்கு..
வாத்தியத்திற்கொரு கிறுக்கு..

கிறுக்குகள் தம் கிறுக்குத்தனத்தின் அச்சில்
ஜம்மென்று அமர்ந்திருக்க
அதிலொரு கிறுக்கு
நேற்று உத்தரத்தில் தொற்றி விண்ணுலகு போனதேன்?
போகும் முன் தன் ப்யானோவை நூறு சுக்காக்கியதேன்?

Comments

சுவையான கவிதை. ‘ஞானக் கிறுக்கு’ என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...