Skip to main content

ஏன் எழுதுகிறேன்


   
                     நன்றி : அந்திமழை –செப்டம்பர்- 2013
         
  எழுதுவதற்கு என்று என்றென்றைக்குமான அடிப்படைக் காரணம் ஒன்றுண்டு. அது ஒருவனுக்கு இந்த உலகத்திற்கு சொல்ல ஒரு சேதி இருக்கிறது என்பது தான். ஒரு சாமானியனுக்கு எந்த சேதியும் இல்லையா என்றால், அவனுக்கும் சொல்ல ஒன்று உண்டு தான் ஆனால் அவனுக்கு சொல்லியே தீரவேண்டிய நெருக்கடியோ, பதைபதைப்போ இல்லை. நீட்டிப்படுத்தால் தூக்கம் வந்து விடுகிறது என்றால் எழுதுவதற்கு ஒரு அவசியமும் கிடையாது .மாறாக படுக்கையில் நாலாய் எட்டாய் சுருண்டு வளையும் பாம்பு எழுதியே தீரவேண்டி இருக்கிறது.
   எது ஒருவனை படுத்தி எடுக்கிறது என்பது ஆளுக்கு தக்க மாறுபடும் அது ஒன்றாகவே இருக்க ஒரு கட்டாயமும் இல்லை.  லா..ரா, தன்னை ஒரு செளந்தர்ய உபாசகன் என்கிறார். இளவேனிலோ, “ சகோதரிகளே , உங்கள் ஸ்நான அறையை நன்றாகத் தாளிட்டுக் கொள்ளுங்கள். வெளியே ஒரு செளந்தர்ய உபாசகன் காத்திருக்கிறான்என்று சொல்கிறார். சொல்லத்தான் செய்வார்….
  தவிர எழுத்துக்காரனுக்கு இயல்பிலேயே ஒரு கோணல்  இருக்கிறது.அவன் தன் கோணலை இரசிக்கிறான். அந்த கோணலின் வழியே அவன் இந்த சலித்த உலகத்தை  புதிதாக்கிப் பார்த்துக் கொள்கிறான். நான் எல்லோரையும் போல அல்ல என்று அவன் முதலில் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். பிறகு ஊருக்கு சொல்ல முனைகிறான்.
     காக்கைக் குருவி எங்கள்  ஜாதி
     நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
என்கிற பித்து இங்கிருந்து தான் புறப்படுகிறது.
  இந்த வாழ்வை எழுதி எழுதித் தான் கடக்க வேண்டும் என்றவன் விரும்புகிறான். எழுத்து ஒரு வெளியேற்றமாக இருக்கிறது. எழுத்து தப்பித்தல் அல்ல என்கிறார் சுகுமாரன் தப்பித்தல் என்றால் எதாவது மாற வேண்டும் அல்லவா என்று கேட்கிறார் என் பதில் என்னவென்றால்நான் வெளியேறிச் செல்லும் இடத்தில் இங்கிருக்கும் எல்லாமும் இருக்கிறது. கூடவே கொஞ்சம் காற்றோட்டமும் இருக்கிறது. அது என் மூச்சுத்தவிப்பை சற்றேனும் குறைக்கிறது.
   ஒவ்வொருவருக்கும் தனக்கேயான ஒரு வாழ்வு உண்டு. இவ்வுலகம் தொன்று தொட்டு சொல்லி வரும் உணர்வுகளை அவன் தன் கைகளால் தொட்டுப் பார்க்க விரும்பிகிறான். தன் விழிகளால் அள்ளிப்பருகப் பார்க்கிறான். யுகயுகமாய் கண்டு வந்த நிலவையல்ல, அவன் காண்பது. இங்கு எழுத்து பிறக்கிறது. ஒரு கோடித் துயரங்களோடு ஒரு துயரம் சேர்ந்து கொள்கிறது. பலகோடிக் காதல்களோடு இன்னொரு காதலும் இணைந்து கொள்கிறது. இன்னொரு தீப்பந்தம் உயருகிறது. எண்ணற்ற நெம்புகோல்களோடு இன்னொரு நெம்புகோலும் சேர்ந்து கொள்கிறது
    தன் எழுத்தில் எதை சொல்ல வேண்டும் என்பதில் ஒருவருக்கு விரும்பியோ விரும்பாமலோ ஒரு  தேர்வு  நேர்ந்து விடுகிறது. வெவ்வேறு விஷயங்களால் இயக்கப் பட்டாலும் ஒரு குறிப்பிட்ட விஷயமே ஒருவரை எழுதத் தூண்டுகிறது. அல்லது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு விஷயம் என்று சொல்லலாம். வெவ்வேறு வண்ணங்களில் ஜாலம் நிகழ்த்திய எழுத்தாளுமைகள் சொற்பமே.
   எதை எழுத வேண்டும் என்பதில் காலம் முக்கியப் பங்கு கொள்கிறது.
சங்க இலக்கியம்அன்பின் ஐந்திணைஎன்கிறது. நான் என்னுடைய காலத்தில் என்னுடைய தர்மத்தின் மீது நின்று கொண்டு
  பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு
   அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விட முடியாது
என்று எழுதுகிறேன். 
   வேறு எந்தக் காலத்தையம் விடவும் ஒருவன் தன் அந்தரங்க உணர்வுகளுக்கு நேர்மை செய்ய வேண்டிய காலமாக இருக்கிறது இது. ஏற்கனவே சொல்லப்பட்ட எல்லா  தத்தவங்களும் அவன்  கண்முன்னே சிதைந்து போய் இருக்கின்றன. ஒருவன் தன்னை ஒரு சுதேசி என்று மார்தட்டிக் கொள்வான் எனில், அவன் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சாக வாய்ப்புள்ள வாழ்வு இன்றையது.
  ஈழத்தில் நடைபெற்ற இன அழித்தொழிப்பின் போது 10 வரிகளை அடுக்கி கவிதை எழுத பெரும்பாலும் யாரும் விரும்பவில்லை. அப்படி எழுதி விட முடியும் தான். அதில் சில நல்ல கவிதைகளும் கிடைத்திருக்கும் தான். ஆனால் இன்றைய எழுத்தாளன் அப்படிச் செய்யாததற்கு அவன் படைப்பு வறுமை காரணம் இல்லை என்று நான் நம்புகிறேன். அவன் தன் அந்தரங்கத்தை மிக நேர்மையாக எதிர் கொண்டதின் விளைவே இது. அவனுக்கு தெரியும் குடித்து விட்டு விடுதி அறைகளை கண்ணீரால் மிதக்க விட்டது தவிர தான் வேறொன்றும் செய்யவில்லை என்று. வேறொன்று செய்ய முடியாதென்றும்.
  

  

Comments

குடிகார கபோதிக்கு அவ்வளவு தான் முடியும்...

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...