Skip to main content

வெள்ளைக்கலர்

                       

                  வெள்ளையிலிருந்து
                 எல்லா வண்ணங்களும் பிறக்கின்றன.
                 குறிப்பாக
                 எலுமிச்சைநிறமும் ரோஸ்கலரும்.

              
                 வெள்ளைக்கலருக்கு
                 விண்ணப்ப படிவம்  இல்லை
                 தேர்வுகள் ஏதுமில்லை
                 அது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.


                வெள்ளைக்கலரை  சிரிக்க வைக்க
                எத்தனை  நகைச்சுவைகள்
                கடைந்தெடுக்கப்படுகின்றன.


               வெள்ளைக்கலரை மகிழ்விக்க
                எத்தனை கவிஞர்கள்
                இரா காக்கிறார்கள்.


                வெள்ளைக்கலரின் ஏடு
                பத்திலிருந்து  நான்கைக் கழித்தால்  ஐந்தென்கிறது.
                கண்டிப்பான தணிக்கையாளன்
                அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறான்.
            

               வெள்ளைக்கலரின் முன்னே
               எத்தனை  மனிதர்கள் உடைந்து சிதறுகிறார்கள் .
               எவ்வளவு மதுப்புட்டிகள் திறக்கப்படுகின்றன.
               எவ்வளவு   கண்ணீர் கொட்டப்படுகிறது.

                சாக்கைடையோரம் கிடந்து
               அழுகியபழம் தின்பவர்களில்
               எத்தனை பேர்
               வெள்ளைக்கலரால் பீடிக்கப்படவர்கள்

              வெள்ளைக்கலரை சாரட்டில் வைத்து
               மேதாவிலாசம் வண்டியிழுப்பதை
               பார்த்துச்சலிக்கிறது வரலாறு.


Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?