Skip to main content

மலைக்கு அப்புறம் என்ன?










என் ஊருக்குப் பின்னே  ஒரு மலை இருக்கிறது.
வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம்
சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன
அதற்குள் அவ்வளவு அவசரம் 
வாழ்வைக் கண்டு பிடிக்க 
இப்படிக்   கிளம்புபவர்கள்
பொதுவாக திரும்பி வருவதில்லை
கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை 
அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்
 எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல்
அவனுக்குத் தெரியும்
வாழ்வின் அர்த்தம் 
ஆடென.

               நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

Comments

Anbu said…
This comment has been removed by a blog administrator.
யோசிக்க யோசிக்க பல கோணங்களில் பல அர்த்தம் தருகின்ற கவிதை. நீர் சத்தியமாக மிஸ்டிக் கவிஞரே! மிஸ்டேக் கவிஞர் அல்ல.
வாழ்வின் அர்த்தம் ஆடென. போய்ப் பொழப்பப் பாருங்கடா... புள்ள குட்டியப் படிக்க வைங்கடா... என்ற தேவர் மகன் இளைமாக்ஸ் வசனம் ஞாபகம் வருகிறது.
வண்ணைசிவா said…
வாழ்வை அதன் போக்கில் விடுவதே நல்லது என்பதை சொல்லும் இக்கவிதை அருமை.

Popular posts from this blog

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

தோழர் !

          கடவுள் எனக்குச் செய்யும் ஒரே ஒரு உருப்படியான காரியம் அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான் இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள் ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள் என்னைத் தூரத்தில் கண்டதுமே சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை தயாரிக்கத் துவங்கி விடுகிறார் கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர் நான் வரும் முன்பே என் வழக்கமான டேபிளில் டீ வந்து அமர்ந்திருக்கும். அதை ஒரு பூச்செண்டு என்று உணர்ந்த கொண்ட நாளில் அவருக்கே கேட்காதபடி கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரைத் " தோழர்! " என்றழைத்தேன்.