Skip to main content

தெய்வாம்சம்


                 
                                               



   
      தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.
 
  வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிமை. தனிமையிலேயே நம்மை நாம் அதிகம் உணர்கிறோம். படத்தில் வாத்தியக் கலப்பற்று ஒலிக்க விடப்பட்டிருக்கும் ராஜாவின் பாடல்கள் நம்மை நம்முள் இழுத்துச் செல்கின்றன.


  கதை பெரும்பாலும் ஓரிரவில் நிகழ்கிறது. காதல் என்கிற தீரவே தீராத ஆதார உணர்வின் மேல் நகர்கிறது. நாம் எவ்வளவு சொன்னாலும் காதலில் விடுபட்டபகுதி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. கலை அந்த விடுபடல்களைத் தொடர்ந்து நிரப்ப முயல்கிறது.பெரிய சிடுக்குகளோ திடீர் திருப்பங்களோ இல்லாத எளிய கதை. எளியதும் சிறியதுமான ஒன்று தன் நுண்ணிய மடிப்புகளாலேயே சுடர் விட முடியும். இப்படைப்பின் ஒளியும் அதுவே. நாயகியின் கணவன் சிகரெட்டால் தொடையில் சூடு வைப்பவனல்ல என்கிற அதிர்ச்சித் தகவலால் நமது மரபார்ந்த சினிமா ரசனைக்கு சப்பென்று ஆகி விடுகிறது. எனவே “ உப்புச் சப்பற்ற “ கதைதான்.  ஆயினும் ஒரு ரசிகன் தன் கண்ணீரால் அவனுக்குத் தேவையான அளவு உப்பிட்டுக் கொள்ளும்படி செய்திருக்கிறார் இயக்குநர். கதையைச் சொல்லி முடித்ததும் “அப்புறம்” என்று சிலர் கேட்கக்கூடும். அப்புறமெல்லாம் ஒன்றுமில்லை... அவ்வளவுதான். இந்த வாழ்வு அவ்வளவுதான் அனுமதிக்கிறது எனவே அவ்வளவுதான்.
 
  ஜானு , தன் வாழ்வில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாளோ அதைக் கற்பனையில் ஓட்டிப் பார்க்கிறாள் ஒரு காட்சியில். " இப்படித்தான் ஜானு நாம் என்னவெல்லாமோ நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.ஆனால் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடக்கிறது ".
  சில திரைப்படங்களில்  நாயகனும், நாயகியும் ஒருவருள் ஒருவர் புகுந்து வெளியேறும் காட்சியில் கூட ரசிகர்கள் தேமேவென்று அமர்ந்திருப்பார்கள். ஜானுவும், ராமும் லேசாகக் கட்டிக் கொள்ளும் காட்சிக்கோ அரங்கு அதிர்கிறது.

           

         






சில விஷயங்களை  உடைத்துப் பார்க்கக் கூடாது. அப்படி உடைத்துப் பார்ப்பதின் வழியே சில உண்மைகள் உங்களுக்குச் சிக்கி விடக்கூடும். ஆனால் அந்த உண்மை கொடுங்கசப்பாக இருக்கும்.  ஏற்கனவே போதுமான  அளவு நெஞ்சுக்குள் கிடக்கிறது. மேலும் கொஞ்சம் கசப்பு எதற்கு? எனவே நான் ராமச்சந்திரனை உடைத்துப் பார்க்க விரும்பவில்லை.அவனை முற்றாக, முழு முற்றாக நம்பவே விரும்புகிறேன். “ இடுப்புப் பகுதி” சக்தி வாய்ந்தது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.ஆனால் அதன் சூறாவளியிலிருந்து ஒருவன் தப்பிப் பிழைத்து விட்டான் என்று நம்புவதிலும் எனக்குச் சிக்கலில்லை.

 படத்தில் இராமாயண காவியத்தின் குறியீடுகள் சில பயன்படுத்தப் பட்டுள்ளன. நாயகன் ராமன். நாயகி ஜானகி.எனில், ராமனின் முதல் எழுத்து “ D  “ அல்லவா ?ஆனால் இதில் “ K. ராமச்சந்திரன் “ என்று குறிப்பிடப்படுகிறது. இவன் தசரத ராமனல்ல.. கோசலை மைந்தன்.. "வசை இல் அய்யன்.."

 தமிழர்கள் இப்படி கும்பலாக குமுறி காலங்கள் ஆகின்றன. எவ்வளவு கலப்படம் மிக்கதாயினும் அழுகை நன்றே. விரைவில் வர இருக்கிற “ சர்க்கார் “ எல்லா அழுகைகளிலிருந்தும் நம்மை விடுவித்தருள்வார்.
 தெய்வங்களை விரட்டியடிப்பதில் கை தேர்ந்தவர்கள் நாம்.  இதோ.. அந்த மஞ்சள் நிறச் சுடிதார் சந்தைக்கு வந்துவிட்டது.


      நன்றி : அந்திமழை- நவம்பர்-18

Comments

படிக்கப் படிக்க மனசுக்குள் வெயிலும் மழையும் சேர்த்தடிக்கிறது...
S.Gomala said…
அழகான வரிகளோட தொடக்கம்..எப்போதுக்குமான பிடித்தவைகளில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது இக்கட்டுரையோட வரிகள்..
கவிஞனின் பார்வையில் ரசனையான விமர்சனம்.இன்னுமொருமுறை முதலில் இருந்து படிக்கத் தூண்டுகிறது.
Thendral said…
Can able to see the film through the poet's eyes. Visualizing film through lines
Anonymous said…
Excellent review Sir.. super.. எதார்த்தம் இது தான் அழகா சொல்லி இருக்கிறீர்கள் இந்த வரிகள் "அப்புறமெல்லாம் ஒன்றுமில்லை அவ்வளவு தான்.
இந்த வாழ்வு அவ்வளவு தான் அனுமதிக்கிறது எனவே அவ்வளவு தான்.."

Popular posts from this blog

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்

                                                                                                       நண்பர் செந்தில்   தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக   பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே   “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...